அலங்கரிக்கப்பட்ட மிதவை தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தை தெப்பத் திருவிழா கோலாகலம்!

சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைத் தெப்பத் திருவிழாவின் 10-ம் நாளான இன்று தெப்பத் திருவிழா நடைபெற்றது. இன்று இரவில் மின்னொளி அலங்கார தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைத் தெப்ப திருவிழாத் ஜன.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில், மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளினர். நேற்று முன்தினம் காலையில் தெப்ப முட்டுத்தள்ளுதல் நடந்தது. பின்னர் சிறிய வைரத் தேரோட்டம் நடந்தது.

10-ம் நாளான இன்று முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழாவை முன்னிட்டு காலையில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீப தூப ஆராதனைகள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் எழுந்தருளினார். அங்கு அலங்கரிக்கப்பட்ட மிதவை தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இரவில் மின்னொளி அலங்கார தெப்பத்திலும் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி சன்னதி தெருவில் சூரசம்ஹார லீலை நடந்து திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ப.சத்யபிரியா, துணை ஆணையர் சூரியநாராயணன், அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், பொம்ம தேவன், ராமையா மற்றும் பணியாளர்கள் செய்தனர்.

SCROLL FOR NEXT