சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னையில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா.. கோவிந்தா’ கோஷத்துடன் சொர்க்கவாசலில் நுழைந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் பகல்பத்து - ராப்பத்து உற்சவம் நடைபெறும். பகல்பத்து உற்சவம் நிறைவடைந்த நிலையில், வைகுண்ட ஏகாதசி நாளான நேற்று சொர்க்கவாசல் திறப்பு எனும் பரமபதவாசல் திறப்பு விமரிசையாக நடைபெற்றது.
அதிகாலை 2.30 மணி முதல்... 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் அதிகாலை 2.30 மணிக்கு மூலவர் வேங்கட கிருஷ்ணனுக்கு முத்தங்கி சேவை நடந்தது. தொடர்ந்து, மகா மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் பார்த்தசாரதி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வைர அங்கி சேவையும் நடந்தது.
அதிகாலை 4 மணி அளவில் உற்சவர் உள்புறப்பாடு நடைபெற்று, 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் உற்சவர் பார்த்தசாரதி பெருமாள், நம்மாழ்வாருக்கு காட்சியளித்தார். இதையடுத்து, சடகோபன் நம்மாழ்வாருக்கு மரியாதை செய்யப்பட்டு, திவ்ய பிரபந்தம் தொடங்கியது.
பின்னர், திருவாய்மொழி மேல் மண்டபத்தில் அமைந்துள்ள புண்ணிய கோடி விமானத்தில் உற்சவர் எழுந்தருளி, சேவை சாதித்தார். கோயிலை சுற்றி அமைக்கப்பட்ட பிரம்மாண்ட திரையின் வாயிலாக, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வை பக்தர்கள் தரிசித்தனர். பின்னர், காலை 6 மணி முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ‘கோவிந்தா.. கோவிந்தா’ கோஷத்துடன் பெருமாளை தரிசித்து, சொர்க்கவாசலை கடந்து சென்றனர்.
வடபழனி ஆதிலட்சுமி தாயார் சமேத ஆதிமூலப் பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணி அளவில் தனுர் மாத பூஜை நடைபெற்றது. மூலவருக்கு புஷ்ப அலங்காரமும், திருப்பாவை சாற்றுமறையும் நடந்தது. காலை 5.15 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவாய்மொழி தொடக்கம், உற்சவர் மண்டகப்படி, பெருமாள் கருடசேவை திருவீதி புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன.
அடையாறு அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் விக்னேஸ்வர பூஜை நடத்தி, மூலவர் சந்நிதி திறக்கப்பட்டது. பின்னர், 336 மகர விளக்கு தீபாராதனை நடந்தது. பின்னர், கருட வாகனத்தில் அலங்காரத்துடன் காட்சியளித்த அனந்தபத்மநாப சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பிறகு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டு உற்சவர் பரமபதவாசலை கடந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மயிலாப்பூர் மாதவ பெருமாள், கோயம்பேடு வைகுண்டவாச பெருமாள், திருநீர்மலை ரங்கநாதர், தியாகராய நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானம், சைதாப்பேட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள், மடிப்பாக்கம் ராமர், நங்கநல்லூர் ஹயக்ரீவர் உள்ளிட்ட பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.