அங்கண் மாஞாலத்து அரசர் அபிமான |
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே ||
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்; |
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே, ||
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ? |
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல் ||
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் |
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்! ||
(திருப்பாவை 22)
கருமை நிறக் கண்ணா! உனது வீரத்தைப் பார்த்து அஞ்சி நடுங்கிய பகைவர்கள், உனக்கு அடிபணிவதைப் போல, பாவை நோன்புப் பெண்களான நாங்கள் அடி பணிகிறோம். பல நாடுகளுக்கு அரசர்களாகத் திகழ்பவர்கள் தங்கள் நாடுகளை இழந்து, தங்கள் அகந்தை அழிந்து, நீ பள்ளி கொண்டிருக்கும் இடத்தில் கூடி நிற்பதைப் போன்று, நாங்களும் உன்னிடம் சரணடைந்து நிற்கிறோம்.
சூரிய, சந்திரர்களாக விளங்கும் உனது விழிகளால் எங்களைக் காண மாட்டாயா? என்று தங்கள் மனம் கவர் கண்ணன் அருள் வேண்டி, ஆண்டாளின் தோழிகள் பாடுகின்றனர். பக்தர்களைக் காக்கும் கண்ணனுடைய திருவடிகளும், கண்களும் இப்பாசுரத்தில் வர்ணிக்கிக்கப்படுகின்றன.
பிறப்பற்ற நிலை அருளும் சிவபெருமானே...!
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின் ||
கருணையின் சூரியன் எழுவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணல் அங்கண்ணாம் ||
திரள்நிரை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே ||
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே. ||
(திருப்பள்ளியெழுச்சி 2)
திருப்பெருந்துறையுள் உறையும் ஆத்மநாதரே! சூரியனின் தேரோட்டியான அருணன், கிழக்கே வந்துவிட்டான். உனது முகத்தில் உள்ள கருணை ஒளி போல, சூரியனும் இருளை நீக்கியடி தன் ஒளியைக் காட்டிவிட்டான். உனது கண்களைப் போன்ற தாமரை மலர்கள் தடாகங்களில் மலர்ந்துவிட்டன.
வண்டினங்களும் தேன் குடிப்பதற்காக திரளாக வந்து அவற்றை சூழ்ந்துள்ளன. மலை போல் இன்பம் தரும் ஈசனே! நீ கண் விழிப்பாயாக என்று மாணிக்கவாசகர் சிவபெருமானுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார். இப்பாடலில் தாமரையை சிவனாகவும், அதைத் தேடி தேன் (பிறப்பற்ற நிலை) குடிக்க வரும் வண்டுகளை தேவர்களாகவும் உருவகம் செய்து பாடுகிறார் மாணிக்கவாசகர்.