ஆன்மிகம்

மத நல்லிணக்கம்: கிருஷ்ணகிரியில் ஐயப்ப பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் அன்னதானம்

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஐயப்ப பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கினர். கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மிலாது நபி விழாக்குழு சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள், அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

அதன்படி, 7-ம் ஆண்டாக மிலாது நபி விழாக்குழு சார்பில் அதன் தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான அஸ்லம் ரஹ்மான் ஷெரிப் தலைமையில் கிருஷ்ணகிரி அருகே கொட்டாவூர் கிராமத்தில் நடந்த ஐயப்பன் கோயில் மண்டல பூஜையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.இதில் 30-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் அன்னதான உணவுகளை பரிமாறினர்.

மத நல்லிணக்கத்தையும், இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த அன்னதான நிகழ்ச்சியில் ரியாஸ், ஜாமீர், ஷாஜகான், நவீத், நூர், ஜஹீர், மன்சூர், பாசில், தபாரக், சஜ்ஜத், ஆரிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மண்டல பூஜைக்கான ஏற்பாடுகளை, தர்மசாஸ்தா மணிகண்டன் அறக்கட்டளை நிறுவனர் அதியமான், சங்கர், மகேந்திரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில், 1000-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT