சபரிமலை ஐயப்பன் கோயில் சிறப்பு பாதையில் சென்று இன்று காலையில் ஐயப்பனை தரிசனம் செய்த குழந்தைகள். 
ஆன்மிகம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியோர், குழந்தைகள் தரிசனம் செய்ய தனிப்பாதை

என்.கணேஷ்ராஜ்

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியோர் மற்றும் குழந்தைகள் விரைவாகவும், சிரமமின்றியும் தரிசனம் செய்யும் வகையில் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மண்டல கால பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 15-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் அதிகபட்சமாக 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 18ம் படி வழியே நிமிடத்துக்கு 80 பக்தர்கள் ஏறிச் செல்கின்றனர். படிகளில் பக்தர்கள் பாதுகாப்பாக ஏறவும், முதியோர், குழந்தைகளை கை தூக்கி விடுவதற்கும் போலீஸார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

15 நிமிட சுழற்சி அடிப்படையில் இந்த போலீஸார் பணி மாற்றம் செய்யப்படுகின்றனர். இதனால் கடந்த காலங்களில் 18ம் படிகளில் ஏற்பட்ட நெரிசல் தற்போது வெகுவாய் குறைந்துள்ளது. இந்நிலையில் முதியோர் மற்றும் குழந்தைகள் விரைவாகவும், சிரமமின்றியும் தரிசனம் மேற்கொள்வதற்காக சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இவர்கள் 18ம் படி ஏறியவுடன் மேல் தள இரும்புப் பாலம் வழியாக சுற்றுப்பாதையில் செல்லாமல் நேரிடையாக தரிசனத்துக்குச் செல்லலாம். இவர்களுடன் உதவிக்கு கூடுதலாக ஒருவர் செல்லலாம். இந்த வசதியினால் முதியவர்களும், குழந்தைகளும் சிரமமின்றி குறைவான நேரத்தில் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

இது குறித்து தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், “பொதுவாக கூட்டம் இல்லாத நேரங்களில் 18ம் படி ஏறி வரும் பக்தர்கள் கொடிமரத்தை வணங்கி நேரடியாக மூலஸ்தானம் முன்பு செல்லலாம். தற்போது நெரிசல் அதிகரித்துள்ளதால் முதியோர் மற்றும் குழந்தைகள் மட்டும் இப்பாதையில் அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற பக்தர்கள் இரும்பு மேம்பாலம் வழியே சன்னிதானத்தின் பின் பகுதி, பக்கவாட்டு பகுதிகளின் வழியே சென்று மீண்டும் மூலஸ்தான பாதை மூலம் தரிசனம் செய்யலாம்” என்றார்.

SCROLL FOR NEXT