ஆன்மிகம்

கடலூர் திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலில் 2,000 பேர் மொட்டை அடித்து நேர்த்திக்கடன்!

க.ரமேஷ்

கடலூர்: கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலில் புரட்டாசி 2 வது சனிக்கிழமையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதசாமி கோயில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.இக்கோயிலில் கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து ஏராளமான பொது மக்கள் சாமி கும்பிட்டு செல்வார்கள். இந்த நிலையில் புரட்டாசி மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக் கடன் செலுத்திவிட்டு தேவநாத சாமியை தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

இன்று(செப்.28) புரட்டாசி 2-ம் சனிக்கிழமை மற்றும் ஏகாதசி என்பதால் திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலில் அதிகாலை 3 மணி அளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேவநாதசாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 5 மணி முதல் பொது மக்கள், பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதித்தனர்.

முன்னதாக அதிகாலை முதல் ஆயிரக் கணக்கான பக்தர்கள் திருவந்திபுரம் பகுதியில் திரண்டனர். பின்னர் தங்கள் நேர்த்திக் கடன் செலுத்துவதற்கு சாலக்கரை இலுப்பை தோப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூடாரத்தில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள், பக்தர்கள் கோயில் முன்பு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி முழக்கம் எழுப்பி நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தது சென்றனர். இந்த நிலையில் காலையில் திடீரென்று மழை பெய்ய தொடங்கிய தால் வழக்கத்தை விட சிறிது நேரம் மிக குறைந்த அளவில் கூட்டம் காணப் பட்டது. பின்னர் கூட்டம் அதிகரித்தது. கடலூரில் இருந்து திருவந்திபுரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு இருந்தன. கடலூர் திருப்பாதிரிபுலியூர் காவல் நிலைய போலீஸார் 2000க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

SCROLL FOR NEXT