விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் நேற்று இரவு (ஞாயிற்றுக்கிழமை) ஆடி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை மூலவர் அங்காளம்மனுக்கு பால் தயிர் இளநீர் தேன் உள்ளிட்டபூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அங்காளம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
இதை தொடர்ந்து உற்சவர் அங்காளம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இரவு 11.00 மணிக்குமேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர் தொடர்ந்து கோயில் பூசாரிகள் அங்காளம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல் பாடினர்.
இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது இதையடுத்து இரவு 11.15மணிக்கு உற்சவர் அங்காளம்மனைகோயில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கொட்டும்மழையில் நனைந்தபடி அம்மனை தரிசனம் செய்தனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் சுரேஷ் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை படிப்படியாக அதிகரித்து கனமழையாக பெய்தது சுமார் 2 மணி நேரமாக பெய்த கனமழையால் ஊஞ்சல் உற்சவம் 15 நிமிடத்தில் முடிந்தது.
இதை தொடர்ந்து பக்தர்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டபோது மேல்மலையனூர் பெரிய கோவில் தெருவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து சீரானது. இதனால் கோவிலுக்கு செல்லும் அனைத்து வழிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் அனைவரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.