மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் ஆக.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.
‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற ஆன்றோர் வாக்கின்படி ஆடி மாதத்தில் விதை விதைத்து நாற்று நட்டு சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்வர். அமோக விளைச்சல் பெற வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபடுவர். விவசாயம் வளம் பெறவும், நாடு செழிக்கவும் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
4 முக்கிய திருவிழாக்கள்: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு ஆகிய 4 திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதில், இந்த ஆண்டு ஆடி முளைக்கொட்டு திருவிழா ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் அம்மன் சந்நிதி முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படும்.
ஆடி வீதியில் எழுந்தருளல்: 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், தினமும் மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன்காலை, மாலையில் ஆடி வீதியில் எழுந்தருள்வார். விழாவின் 7-வது நாளில்உற்சவர் சந்நிதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும் என கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் தெரிவித்தார்.