ராமேசுவரம்: வைகாசி அமாவாசையையொட்டி ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடி,முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு, ஸ்படிக லிங்க பூஜை, சாயரட்சை பூஜை, கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையில் இருந்தே ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் திரண்ட பக்தர்கள் புனிதநீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ததுடன், தோஷங்கள் நீங்க பூஜைகள் செய்தனர்.
தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். பின்னர் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் ரத வீதிகள், அக்னிதீர்த்தக் கடற்கரை மற்றும் பக்தர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
பெண்ணிடம் 5 பவுன் திருட்டு: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த சிந்துஜா(35) என்ற பெண் பக்தர் கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்களில் நீராடியபோது, அவரது 5 பவுன் தங்கச் சங்கிலி திருடு போனதாக புகார் அளித்தார். இதுகுறித்து ராமேசுவரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.