தருமபுரம் ஆதீன குருமூர்த்தங்களில் சிறப்பு வழிபாடு செய்வதற்காக நாற்காலி பல்லக்கில் சென்ற தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம்  ல கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். 
ஆன்மிகம்

வெள்ளி நாற்காலி பல்லக்கில் சென்று குருமூர்த்தங்களில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு: சிவிகை பல்லக்கில் இன்று பட்டினப் பிரவேசம்

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன மடத்தில் உள்ளஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பெருவிழா மற்றும் ஆதீன குருமுதல்வர் குருஞான சம்பந்தர் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம்.

நடப்பாண்டு பெருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக கடந்த 26-ம் தேதி திருக்கல்யாண உற்சவம், நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றன.

விழாவின் 10-ம் நாள் நிகழ்வாக, ஆதீனத்தை தோற்றுவித்த குருஞான சம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வெள்ளி நாற்காலி பல்லக்கில் சென்று, தருமபுரம் ஆதீன மடத்தின் முந்தைய ஆதீனகர்த்தர்களின் குரு மூர்த்தங்களில் சிறப்பு வழிபாடு செய்தார்.

அப்போது, மங்கல வாத்தியங்கள் முழங்க, 3 யானைகள், ஒட்டகம்,குதிரை ஆகியவை முன்செல்ல, பக்தர்கள் வெள்ளி நாற்காலி பல்லக்கை சுமந்து சென்றனர். நிகழ்ச்சியில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இன்று (மே 30) இரவு தருமபுரம் ஆதீனம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சிவிகை பல்லக்கில் பட்டினப் பிரவேசம் மேற்கொண்டு, நாளை அதிகாலை பக்தர்களுக்கு ஆசி வழங்கும் ஞானக்கொலு காட்சி நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT