ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் – தாயார் சேர்த்தி சேவை: படம்: ர.செல்வமுத்துகுமார் 
ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

செய்திப்பிரிவு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழாவை யொட்டி நம்பெருமாள் - தாயார் சேர்த்திசேவை நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழா மார்ச் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நம் பெருமாள் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் 9-ம் நாளான நேற்று (பெரிய பிராட்டியார் பங்குனி உத்திரம்) நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் தங்கப் பல்லக்கில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து, ஆழ்வான் திருச்சுற்று வழியாக தாயார் சந்நிதியை சென்றடைந்தார். பின்னர் சமாதானம் கண்டருளி, முன் மண்டபத்தை சேர்ந்தார். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு பங்குனி உத்திர சேர்த்தி மண்டபத்துக்கு வந்தார்.

அதேபோல, தாயார் ரங்க நாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு பிற்பகல் 3 மணி முதல் இரவு 10.30 மணி வரை சர்வ அலங்காரத்துடன் நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் இன்று (மார்ச் 26) காலை நடைபெற உள்ளது. இன்று இரவு சப்தாவரணமும், நாளை(மார்ச் 27) இரவு ஆளும் பல்லக்கு வீதி உலாவும் நடைபெறும். இத்துடன் பங்குனித் திருவிழா நிறைவு பெறுகிறது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரியப்பன் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT