ராமேசுவரம்: அஷ்டமி பூப்பிரதட்சணத்தை யொட்டி ராமேசுவரம் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சிவபெருமான் உணவு படியளக்கும் திருவிழாவான அஷ்டமி பூப்பிரதட்சணத்தை யொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டது. 3.30 முதல் 4 மணி வரை ஸ்படிக லிங்க பூஜையும், அதைத் தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி பூஜை, கால சந்தி பூஜையும் நடைபெற்றன.
பின்னர் காலை 7 மணியளவில் நடை சாத்தப்பட்டது. அதன் பின்பு ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் தங்க ரிஷப வாகனங்களில் எழுந்தருளி, பஞ்சமூர்த்திகளுடன் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு படியளந்து அருள் பாலித்தனர். நண்பகல் 12 மணியளவில் ராமநாத சுவாமி, அம்பாள் கோயிலுக்கு திரும்பியதும் உச்சிகால பூஜைக்கு பின்னர் மீண்டும் நடை திறக்கப்பட்டது.