திருப்பள்ளியெழுச்சி
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !
வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே !
கடலமுதே! கரும்பே! விரும்படியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
அதாவது, விண்ணுலகில் உள்ள தேவர்கள் அணுகக் கூட முடியாத மேன்மையான பொருளே! உமக்கு அடிமை பூண்ட அடியார்களாகிய நாங்கள், இந்த மண்ணுலகில் வந்து, வாழ வழிவகை செய்தவனே! அழகு மிகுந்த திருப்பெருந்துறையுடையவனே! வழியடியார்களாகிய எங்கள் கண்ணினுள் நின்று ஆனந்தம் தருகின்ற தேனே! கடலில் இருந்து தோன்றிய அமுதமாகத் தோன்றுபவனே! கரும்பே என்று இனிக்க இனிக்கப் பாடுகிறார் மாணிக்கவாசகர்!
விரும்பித்தொழும் அடியவர்களின் எண்ணத்தில் நிறைந்தவனே! உலகுக்கு உயிரானவனே என்று சிலாகிக்கிறார் மாணிக்கவாசகர்!
எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்க என்று வேண்டுகிறார்!
(நண்ணுதல் - நெருங்குதல்; விழு - மேன்மை; தொழுப்பு (தொழும்பு) -
அடிமைப்பணி; வண் - அழகிய; களி - மகிழ்ச்சி).
இந்தப் பாடலை, மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சிப் பாடலை மனதாரப் பாடுங்கள். சிவ பார்வதியை ஆத்மார்த்தமாக வேண்டுங்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வாழ்வில் குதூகலம் நிறைந்திருக்கும்!