குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று முன்தினம் மாலை மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று அதிகாலை முதல் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. 41 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறும்.
இந்நிலையில், சந்நிதானத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், தேவஸ்தான அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது 21 லட்சம் அரவணைகளும், 3.2 லட்சம் அப்பமும் பிரசாதஸ்டால்களில் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, அன்னதானம் வழங்கும் திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த், எம்எல்ஏ-க்கள் ஜெனீஷ்குமார், பிரேமோத் நாராயணன், தேவசம் போர்டு செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இங்கு ஒரே நேரத்தில் 5 ஆயிரம்பேர் அமர்ந்து சாப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. காலை 6.30 மணி முதல் 11 மணி வரை உப்புமா, தேநீர், பிற்பகல் 12 முதல்4 மணி வரை புலாவ், சாலட், ஊறுகாய் அடங்கிய மதிய உணவு,மாலை 6.30 மணி முதல் கஞ்சிவழங்கப்படுகிறது. இதுதவிர, சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்காக மூலிகை கலந்த சூடான குடிநீரும் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.