திருப்பள்ளியெழுச்சி
"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்
திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !
அதாவது, "இந்த மண்ணுலகம் சிவபெருமான் வழியாக உய்யக் கொள்கின்றது. (சிறந்த இடம்). அப்படிப்பட்ட இப்பூவுலகில் பிறவாமல் நாம் நாட்களை வீணாகக் கழித்துக்கொண்டிருக்கிறோம்." என்று திருமால் விருப்பப்பட்டுப் பிறக்குமாறும், பிரம்மன் ஆசைப்படுமாறும், திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே, உம்முடைய மிக மலர்ந்த மெய்க் கருணையுடன் நீங்கள், இவ்வுலகில் வந்து எம்மை ஆட்கொள்ள வல்லவர்! அத்தகைய விருப்பம் தரும் அமுதமே! பள்ளி எழுந்தருள்க என்று பாடிக் கொண்டாடுகிறார் மாணிக்கவாசகர்!
(புவனி - பூமி; மலரவன் - பிரமன்; அவனி - உலகம்).
இந்தப் பாடலை அனுதினமும் பாடுங்கள். சிவபார்வதியை வழிபடுங்கள். இந்த நாளில் வழிபட்டு, பிறக்கும் தை மாதம் தொடங்கி எல்லா நாளும் நம்மைக் காத்தருள்வார் எம்பெருமான் சிவனார்! நமசிவாயம்... நமசிவாயம்... நமசிவாயம்!