கோப்புப் படம் 
ஆன்மிகம்

திருச்செந்தூரில் நவ. 13-ம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடக்கம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி/மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் 13-ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்குகிறது. வரும் 18-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று நடைபெறும் கந்த சஷ்டி விழாவில் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

நடப்பாண்டு கந்த சஷ்டி விழா வரும் 13-ம் தேதி தொடங்குகிறது. அன்று அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்குஉதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 7 மணியளவில் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது.

பின்னர் 5-ம் நாள் வரை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன. தினமும் பகல் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து ஜெயந்திநாதர் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலியபாடல்களுடன், மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேர்தலும், தீபாராதனையும் நடைபெறும்.மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.

நவ.18-ல் சூரசம்ஹாரம்: வரும் 18-ம் தேதி மாலை 4 மணியளவில் ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கடற்கரைக்கு எழுந்தருள்வார். அங்குநடைபெறும் சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர். சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெறும்.

பின்னர் கிரிப்பிரகாரம் வந்து,திருக்கோயில் சேர்தல் நடைபெறும். இரவு 108 மகாதேவர் சந்நிதி முன்பு சுவாமிக்கு சாயா அபிஷேகம் முடிவுற்ற பின்னர், பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டுதல் நடைபெறும்.

வரும் 19-ம் தேதி காலை 5.30 மணிக்கு தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சுவாமி காட்சிகொடுத்து, மாலை மாற்றுதல், இரவு திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெற உள்ளன.

விழாவையொட்டி, விரதமிருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக தற்காலிக கொட்டகைகள் அமைத்தல், கடற்கரையில் மணலை சமன்செய்து, தடுப்புகள், தற்காலிக கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடம்அமைத்தல் உள்ளிட்ட பணிகள்நடைபெற்று வருகின்றன. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் ரா.அருள்முருகன், இணைஆணையர் மு.கார்த்திக் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில்...: இதேபோல, மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 13-ம் தேதி கந்த சஷ்டி விழாவுக்கான காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி தேவசேனா திருமண மண்டபத்தில் விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஏராளமான பெண் பக்தர்கள் இரவில் தங்குவதால், உரிய பாதுகாப்பு அளிப்பதுகுறித்தும், அடிப்படை வசதிகள் செய்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில், பொதுப்பணி, மருத்துவம், சுகாதாரம், காவல், மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT