மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று சரஸ்வதி அலங்காரத்தில் கோவர்த்தனாம்பிகை அம்மன் அருள்பாலித்தார். 
ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சிவபூஜைக்கு பதிலாக சரஸ்வதி அலங்காரம்: பக்தர்கள் குழப்பம்

சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி விழாவில் இன்று சிவபூஜை அலங்காரத்திற்கு பதிலாக சரஸ்வதி அம்மன் அலங்காரத்தில் கோவர்த்தனாம்பிகை அம்மன் அருள்பாலித்ததால் பக்தர்கள் குழப்பமடைந்தனர்.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி விழா அக்.15ம் தேதி தொடங்கியது. முதல்நாளன்று கோவர்த்தனாம்பிகை அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதனைத்தொடர்ந்து நக்கீரருக்கு காட்சிக்கொடுத்தல், ஊஞ்சல், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தபசுக்காட்சி, மகிஷாசுரமர்த்தினி ஆகிய அலங்காரத்தில் அருள்பாலித்தார். எட்டாம் நாளான இன்று சிவபூஜை அலங்காரம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சிவாச்சாரியார்கள் சிவபூஜை அலங்காரத்திற்குப் பதிலாக கோவர்த்தனாம்பிகை அம்மனுக்கு சரஸ்வதி பூஜை அலங்காரம் செய்தனர். இதனால் பக்தர்கள் குழப்பமடைந்தனர். இதுதொடர்பாக கோயில்நிர்வாகத்திடம் கேள்விகள் கேட்டனர். அதனைத்தொடர்ந்து 9-ம் நாளான (நாளை) திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த சரஸ்வதி பூஜை அலங்காரத்திற்குப் பதில் சிவபூஜை அலங்காரம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT