ஆன்மிகம்

மார்கழியில் பாடுவோம் திருப்பள்ளியெழுச்சி!

சிதம்பரம் உ.வெங்கடேச தீட்சிதர்

திருப்பள்ளியெழுச்சி

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்

எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே!

அதாவது, ஒருபக்கம் வீணை மற்றும் யாழ் கொண்டு இனிய இசை செய்பவர்கள், ஒருபக்கம் ரிக் வேதமும் பல தோத்திரங்களும் சொல்பவர்கள், இன்னொரு பக்கம்... நிறைய மலர்களைக் கையில் பிடித்தவர்கள், அடுத்த பக்கத்தில்... அன்பின் மிகுதியால் அழுவார்களும் தொழுவார்களும் இருக்கிறார்கள்.

அதாவது, அன்பின் மிகுதியால் தொழுவார்களும் விடாது அழுவார்களும் துவண்ட கைகளை உடையவர்களும் இன்னொரு பக்கத்தில் சிரத்தின் மீது கைகுவித்து நமஸ்கரிப்பவர்களும் இருக்கிறார்கள்.

திருப்பெருந்துறையில் இருக்கும் சிவபெருமானே! இவர்களோடு என்னையும் ஆண்டுகொண்டு, இனிய செய்வாயாக! எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக! என்று உருகுகிறார் மாணிக்கவாசகர்

(துன்னிய - செறிந்த, சென்னி - தலை, அஞ்சலி - வணக்கம்)

இந்தப் பாடலை, பார்வதிமணாளனை நினைத்துப் பாடுங்கள். முடிந்தால் வில்வமும் செவ்வரளியும் சிவனாருக்குச் சார்த்தி வணங்கிப் பாடுங்கள். எல்லா சந்தோஷங்களும் கிடைத்து, இனிதே வாழலாம். இன்னல்கள் தீர்த்து, இல்லத்தில் ஒளியென அருள்புரிவார் ஈசன்!

SCROLL FOR NEXT