ஆன்மிகம்

மார்கழியில் பாடுவோம் திருப்பள்ளியெழுச்சி!

சிதம்பரம் உ.வெங்கடேச தீட்சிதர்

திருப்பள்ளியெழுச்சி

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்

பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்

வணங்குகிறார்; அணங்கின் மணவாளா செப்புறு

கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!

இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே!

அதாவது, விரிந்து செல்லுதல் இல்லாது (ஒருமைப்பட்ட மனத்துடன்) வீடுபேற்று நிலையில், உணருகின்ற உம்முடைய அடியவர்கள் பந்தமாகிய கட்டுக்களை அறுத்தனர். அவர்கள் பலரும் மையணிந்த கண்களை உடைய பெண்களைப் போலத் தம்மைக் கருதி, உம்மைத் தொழுகின்றனர். அதாவது காதலனாகக் கருதி உருகுகின்றனர்.

உமையாகிய பெண்ணின் மணவாளனே! சிவந்த தாமரை கண் விழிக்கின்ற (இதழ்களை விரிக்கின்ற) குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறைச் சிவபெருமானே! இந்தப் பிறவியை நீக்கி எம்மை ஆண்டு அருள்புரிகின்ற எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்க! என்று பாடுகிறார் மாணிக்கவாசகர்.

(பப்பி - பரப்பு, அணங்கு - பெண், செப்புறு - செம்மை உடைய).

இந்த திருப்பள்ளியெழுச்சிப் பாடலை, சிவனாரை நினைத்து தினமும் பாடி வந்தால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். கணவன் மனைவி இடையே கருத்தொற்றுமை ஓங்கும். இல்லத்தில் சந்தோஷம் குடிகொள்ளும் என்பது உறுதி!

SCROLL FOR NEXT