ஆழ்வார்கள் பாடிய பாடல்களைத் தொகுத்தவர் நாதமுனிகள். இதுவே நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று போற்றப்படுகிறது. இவர் ஒருமுறை கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் மீதான ஆராவமுதே என்று தொடங்கும் திவ்யபிரபந்த பாசுரத்தை சிலர் பாடக்கேட்டு மெய்ம்மறந்து நின்றார்.
அதில் ஓராயிரத்துள் இப்பத்தும் என்னும் அடி வந்தது. அவர்களிடம், ‘நீங்கள் பாடிய பாடலின் பொருள்படி, ஆயிரத்தில் பத்துபாடல் போக மீதி 990 பாடல்கள் எங்கே?’ என்று கேட்டார். ஆனால், அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே நாதமுனிகள் ஆழ்வார்திருநகரி சென்று இந்த கேள்வியை மதுரகவியாழ்வாரின் வம்சாவளியினரிடம் கேட்டறிந்தார்.
அவர்கள் பாசுரங்களைப் பெறுவதற்கு ஒரு வழியைக் கூறினர். மதுரகவியாழ்வாரின் பாசுரங்களை , 12 ஆயிரம் முறை எவரொருவர் ஒருவர் பாடுகிறாரோ, அவர் முன் ஆழ்வாரே தோன்றி அருள் செய்வார். அவரிடம் விபரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்கள்.
அதன்படி... நாதமுனிகள் 12ஆயிரம் முறை மதுரகவியாழ்வாரின் பாசுரத்தைப் படித்தார். ஆழ்வாரின் அருளால் ஆழ்வார்கள் பாடிய அனைத்துப் பாசுரங்களையும் பெற்றார்.
அந்தப் பாடல்களுக்கு தமிழ்ப்பண் அமைப்பில் இசையமைத்தார். திவ்ய பிரபந்தம் என்று பெயர் சூட்டினார். தன்னுடைய சீடர்களான உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், மேலையகத்தாழ்வான் மூலம் அந்தப் பாசுரங்களை திவ்யதேசங்கள் எங்கும் பாடச் செய்தார்.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் பாடும் போதெல்லாம் நாதமுனிகளையும் மனதார நினைத்துத் தொழுவோம்!