திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடிக் கிருத்திகை திருவிழாவில், நேற்று நடைபெற்ற ஆடி பரணி விழாவில் பல்வேறு வகையான காவடிகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 
ஆன்மிகம்

திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி விழா: காவடி எடுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

செய்திப்பிரிவு

திருத்தணி: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்து வரும் ஆடிக் கிருத்திகை திருவிழாவில், நேற்று நடைபெற்ற ஆடி பரணி விழாவில் பல்வேறு வகையான காவடிகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான, சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நேற்று முன்தினம் ஆடிக் கிருத்திகை திருவிழா, ஆடி அஸ்வினி விழாவோடு தொடங்கியது.

ஆடி பரணி விழாவை முன்னிட்டு, நேற்று சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஆடைகளை உடுத்திக் கொண்டு, பால் காவடி, புஷ்பக் காவடி உள்ளிட்ட காவடிகளுடன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருத்தணி அருகே அமிர்தாபுரம், சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ரவுன்டானா, அரக்கோணம் சாலை ஆகிய பகுதிகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆடிக் கிருத்திகை திருவிழாவின் முக்கிய விழாவான கிருத்திகை திருவிழா முதல் நாள் தெப்பத் திருவிழா இன்று (ஆக. 9-ம் தேதி) நடக்கிறது.

SCROLL FOR NEXT