தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கருட சேவை விழாவைதொடர்ந்து 15 பெருமாள் கோயில்களில் நவநீத சேவை விழா எனப்படும் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் ராஜவீதிகளில் சுவாமி வீதியுலா நேற்று நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை ஆகியவை சார்பில் 89-ம் ஆண்டு கருட சேவை விழா, ஆழ்வார் மங்களாசாசனத்துடன் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, நேற்று முன்தினம் 24 கருட சேவை விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, 15 பெருமாள் கோயில்களில் வெண்ணெய்த்தாழி பெருவிழா என்ற நவநீத சேவை விழா நேற்று நடந்தது.
இதில், வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்ற பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், மேல வீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் கோயில் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவக் கண்ணன், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்ட ராமசாமி பெருமாள், மகர்நோம்புசாவடி நவநீத கிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேச பெருமாள், மேல அலங்கம் ரங்கநாத பெருமாள், படித்துறை வெங்கடேச பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய கோயில்களிலிருந்து நேற்று புறப்பாடு நடைபெற்றது.
இதையடுத்து, அந்தந்த கோயில்களிலிருந்து கொடிமரத்து மூலைக்குச் சென்றடைந்து, பின்னர், அரண்மனையைச் சுற்றியுள்ள ராஜவீதிகளில் வீதியுலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள், பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இந்த விழா இன்று (ஜூன் 11) விடையாற்றியுடன் நிறைவடைகிறது.