ரா
ஜாக்கள், ப்ரஸிடென்ட்கள் எல்லோருக்கும் மேலே த்ரிலோகங்களுக்கும் ராஜாவாக இருக்கப்பட்ட ஈசனுடைய குழந்தை அவர். மூத்த குழந்தை. மூத்தது சாது என்று வசனம். அதனால் இவரை திருப்தி செய்வது ரொம்பவும் சுலபம். அதற்காக இஷ்டப்படி இருந்துவிட முடியாது.
நமக்கு ரொம்பவும் இடம் கொடுத்துப் போய்விடப் போகிறதேயென்றுதான் கம்பீரமான யானை ஸ்வரூபமாயிருக்கிறார்! அதனால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவுந்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விக்னங்கள் பண்ணுவார்! இவருடைய மஹா பெரிய தகப்பனார், தாயார் சொன்னேனே, அவர்களுக்கே விக்னம் பண்ணி, “உம் ஜாக்கிரதை” என்று அதன் மூலம் நமக்கும் ‘வார்ன்’ பண்ணுகிறார்.
‘சின்ன எசமான்’ என்று பிரியத்தோடேயே கொஞ்சம் பயமும் சேர்த்து இவரைப் பூஜை பண்ணிவிட்டால் அப்படியே ப்ரீதியாகி விடுவார். அதிலேயே பார்வதி பரமேச்வராளும் உச்சி குளிர்ந்து விடுவார்கள். இவருடைய மாதா பிதாக்களான அந்த அம்பிகையும் ஈச்வரனுந்தானே இத்தனை லோகங்களையும் அவற்றில் உள்ள நம் போன்ற சமஸ்த பிராணிகளையும் ஸ்ருஷ்டித்து, ரக்ஷித்து வருகிற ஸர்வ சக்தர்கள்? அவர்களுடைய அநுக்ரஹத்தைப் பெற்றுவிட்டால் நாம் இஹம் பரம் இரண்டிலும் எந்த நன்மையும் பெற்றுவிடலாம். ஆனால் நேராக அவர்களையே பூஜை பண்ணி அனுக்ரஹத்தைப் பெறுவது அவ்வளவு சுலபம் இல்லை. சிவபூஜை, அம்பாள் பூஜை ஆகியவற்றுக்கு அநேக நியமங்கள் உண்டு. அதையெல்லாம் நாம் கிரமமாக அனுசரிப்பது சிரமம்.
‘ஆசுதோஷி’, ‘க்ஷிப்ர ப்ரஸாதினி’ என்றெல்லாம் ‘எளிதில் திருப்தியாகி அனுக்கிரஹிக்கிறவர்கள்’ என்று அர்த்தம் கொடுக்கும் பெயர்கள் அவர்களுக்கும் இருக்கிறதென்றாலும் சிவன் கோயில், அம்பாள் கோயில் என்று போனால், இங்கேதான் நிற்கணும், இங்கேதான் நமஸ்காரம் பண்ணணும், இன்ன புஷ்பம், இன்ன நைவேத்யம்தான் அர்ப்பணம் பண்ணணும் என்றெல்லாம் எத்தனை கட்டுப்பாடு இருக்கிறது?
மாமாக்காரர் மஹாவிஷ்ணு மருமானுக்கு மரியாதை பண்ணி அவர் மஹிமை தெரியும்படியாகச் செய்ததைச் சொல்லவேண்டும்.
மஹாவிஷ்ணு என்ற மூலரூபத்தில் அவர் இவரிடமிருந்து சக்ரத்தை வாங்க முடியாமல் தோப்புக்கரணம் போட்டது மட்டுமில்லை; ராம க்ருஷ்ணாதி அவதாரங்களிலும் பிள்ளையாருக்கு சாஸ்த்ரோக்தமாகப் பூஜை பண்ணியிருக்கிறார்.
ராமாவதாரத்தில் ராவண சம்ஹாரம் ஆன பிற்பாடு அவர் ராமலிங்க ப்ரதிஷ்டை செய்து சிவாராதனம் பண்ணியது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ராவண சம்ஹாரத்துக்கு முன்னாடி, கிஷ்கிந்தையிலிருந்து போகிறபோதே ஸேது பந்தம் நிர்விக்னமாக நடக்க வேண்டுமென்பதற்காக அவர் ராமநாதபுரம் சமுத்ரக்கரையில் நவ பாஷாணம் என்ற இடத்தில் நவக்ரஹ ப்ரதிஷ்டை செய்து பூஜை பண்ணினாரென்பதும் சில பேருக்காவது தெரிந்திருக்கும். தேவி பட்டணம் என்பது அந்த நவபாஷாணந்தான்.
இப்போதும் ராமேச்வர யாத்திரை போகிறவர்கள், சுற்றுப்பட்ட க்ஷேத்திரங்கள் பலவற்றுக்குப் போகும்போது நவபாஷாணத்துக்கு நிச்சயமாகப் போகிறார்கள். மிகவும் க்ரமமாக இந்த யாத்திரை பண்ணினால் முதலில் போக வேண்டிய ஊர் ஒன்று இருக்கிறது. விஷயம் தெரிந்தவர்கள் ஸேது யாத்ரா என்றால் அங்கேயிருந்துதான் ஆரம்பிப்பார்கள்.
ஆரம்ப ஸ்வாமியான விக்நேச்வரரை ராமசந்த்ரமூர்த்தி பூஜை பண்ணிய ஊர்தான் அது. உப்பூர் என்று பெயர். ராமர் மாதிரி வடக்கேயிருந்து வந்தால் நவபாஷாணத்துக்கு முன்னால் அது வந்துவிடும். அதுதானே பொருத்தம்? நவக்ரஹங்களைப் பூஜிப்பதற்கும் முதலில் ‘சுக்லாம்பரதரம்’ குட்டிக்கொண்டுதானே ஆகவேண்டும்? எல்லாம் மநுஷ்ய ரீதியில் சாஸ்த்ரோக்தமாக, ஸம்ப்ரதாய பூர்வமாகப் பண்ணி வழிகாட்டியவர் ராமர். அவர் ஸேதுபந்தத்துக்கு முன் நவக்ரஹங்களை ப்ரீதி செய்தாரென்றால், அதற்கும் முந்தி ஸர்வ விக்ன ஹர்த்தாவான பிள்ளையாரையும் பூஜை பண்ணித்தானிருப்பார். அப்படி அவரால் பூஜிக்கப்பட்டவர்தான் நவபாஷாணத்துக்குப் பக்கத்தில இருக்கும் உப்பூர்ப் பிள்ளையார். வரப்ரஸாதி என்று அந்த வட்டாரத்திலுள்ளவர்களெல்லாம் கொண்டாடும் மூர்த்தி. மற்றவர்களுக்கு வரம் கொடுப்பாரே தவிர தமக்கு ஒரு கூரைகூட இல்லாதவர். தமக்கு மேலே விமானம் கட்ட அவர் விடுவதேயில்லை. எதையாவது விக்னத்தை உண்டுபண்ணி அதை தடுத்துவிட்டு, எளியவர்களில் எளியவராக, வெய்யில் மழை எல்லாம் தம்மேலேயே விழும்படி உட்கார்ந்திருக்கிறார்! ‘வெயிலுகந்த விநாயகர்’ என்றே அவருக்குப் பெயர்.
தொந்தி கணபதிக்கு ‘டுண்டி’ என்று சமஸ்க்ருதத்தில ஒரு பெயருண்டு. டுண்டிராஜ கணபதி காசியில் பிரக்யாதியோடு இருக்கிறார். அதன் ஸம்பந்தமாகத் தானிருக்க வேண்டும், தமிழ் தேசத்திலும் ‘தொண்டி’ என்று விநாயக க்ஷேத்ரம் இருக்கிறது. இதுவும் ராமர் பூஜித்த க்ஷேத்ரமாகத்தான் சொல்லப்படுகிறது. வேதாரண்யத்திலிருந்து சமுத்திரக்கரை ஓரமாகவே தெற்காக வந்தால், ஏறக்குறைய வேதாரண்யத்துக்கும் உப்பூருக்கும் நடுபாதியில் தொண்டி இருக்கிறது. முதலில் ராமர் இங்கேயிருந்துதான் லங்கைக்கு அணைகட்ட நினைத்தாராம். இங்கே அதற்காக அவர் பிள்ளையார் பூஜை பண்ணப் பிள்ளையாரும் ப்ரஸன்னமானார். ராமருக்கு வெற்றி நிச்சயம் என்று வரம் கொடுத்துவிட்டு, இந்தத் தொண்டி விநாயகரும் தமக்கு மேலே விமானமில்லாமல்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். மாமாக்காரர் மழையிலும் வெய்யிலிலும் அலைந்து கொண்டு லங்கைக்கு அணைகட்டிக்கொண்டு போகும்போது நாம் மட்டும் கோவில் கட்டிக்கொண்டு கொண்டாட்டம் அடிக்கக் கூடாதென்றுதான் இப்படி இரண்டு இடத்திலுமே இருக்கிறார் போலிருக்கிறது. ஆசார்யாள் ‘கணேச பஞ்சரத்ந’ ஸ்தோத்ரம் செய்திருப்பது தொண்டி கணபதி மேல்தான்.
ஈச்வரஸுதனை ஸ்ரீராமர் ஆராதனை பண்ணி அநுக்ரஹம் பெற்ற பலன்தான், கடைசியில் அவர் ராவண சம்ஹாரம் பண்ணி விஜய ராகவனாக, அதோடுகூட இப்போது பறி கொடுத்திருந்த பத்னியைத் திரும்பவும் பெற்ற ஸீதா ராமனாகத் திரும்பிவந்து அந்த ஈச்வரனையே ராமலிங்கமாக ப்ரதிஷ்டை செய்தது.
தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)