தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரது வீடியோ ட்விட்டரில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
திறமையானவர்களை அடையாளம் காண்பது மட்டுமில்லாமல் அவர்களுக்கான முழு அங்கீகாரம் கிடைக்கும் ஊடகமாக இணையம் இன்று மாறியுள்ளது. அதற்கு சமீபத்திய உதாரணம் ஒன்று. கொல்கத்தா ரயில் நிலையத்தில் ஆதரவற்று இருந்த ரானு மண்டல் தனது வசீகரக் குரலில் பாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து இன்று பாலிவுட்டில் பல பாடல்களைப் பாடி வருகிறார்.
இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு, சுற்றுலா வழிகாட்டி ஒருவர், வெளி நாட்டவர்களுக்கு இந்தியாவின் கலாச்சார நடனத்தை விளக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவை பிரியங்கா ஷுக்லா என்ற ஐஏஎஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில், வாட்ஸ் அப்பில் வந்த வீடியோ என்று குறிப்பிட்டு, ''பிரபு என்ற இந்த சுற்றுலா வழிகாட்டி தமிழகத்தைச் சேர்ந்தவர். திறமையானவர்” பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பிரபு என்று குறிப்பிடப்பட்டுள்ள சுற்றுலா வழிகாட்டி மயில், சிவன், பாரதி என அனைவரது உருவத்தையும் தனது அழகான நடன அசைவுகளால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விளக்குகிறார். சுற்றுலாப் பயணிகளும் அவரது நடனத்தை வெகுவாகப் பாராட்டுகின்றனர்.
இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் இல்லை.
நெட்டிசன்கள் பலரும் சுற்றுலா வழிகாட்டியின் நடன அசைவுகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.