சமூக வலைதளம்

சமூக வலைதளங்களில் வைரலான ஓணம் நடனம்

செய்திப்பிரிவு

கேரள மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் பண்டிகைகளில் ஓணமும் ஒன்று. கேரளாவில் மட்டும் அல்லாமல் தமிழகத்தில் வசிக்கும் கேரள மக்களாலும் இந்தப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவதால் தமிழகத்தில் இப்பண்டிகை பரவலாக அறியப்பட்டுள்ளது.

அசுரகுல சக்கரவர்த்தியான மகாபலி மன்னனுக்கும், தேவர்களுக்கும் ஏற்பட்ட போரில் மகாபலி வெற்றி பெற்றார். பயந்துபோன தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். இதையடுத்து, வாமன அவதாரம் எடுத்த திருமால், மகாபலியின் அரண்மனைக்குச் சென்று, தான் தவம் செய்வதற்காக மூன்றடி மண் கேட்டார்.

இதற்கு மகாபலி ஒப்புக்கொள்ளவே, திரிவிக்கிரம அவதாரம் எடுத்த திருமால், ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் தேவலோகத்தையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்று கேட்கவே, தனது சிரம் மேல் மூன்றாவது அடியை வைத்து அளக்குமாறு கூறினார் மகாபலி. இதையடுத்து, மகாபலியின் சிரம் மீது கால் வைத்து அழுத்த, பாதாள லோகத்துக்குள் சென்றார் மகாபலி. அப்போது, தான் ஆண்டுக்கு ஒருமுறை மக்களை வந்து பார்க்க அனுமதி கேட்ட மகாபலிக்கு, வரம் தந்து அருளினார் திருமால். இதன்படி, மகாபலி சக்ரவர்த்தி மக்களைக் காண வரும் நாளே ஓணம் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

ஓணம் பண்டிகையைத் தொடர்ந்து கடந்த ஒருவாரமாக அப்பண்டிகை சார்ந்த கொண்டாட்டங்கள் கேரள மக்களால் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டது. கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தலைவர்கள் பலரும் கேரள மக்களுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி சமூக வலைதளத்தில் ஐஎஃப்எஸ் அதிகாரியான பிரவின் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகைக்காக ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனம் ஆடும் ஐஎஃப்எஸ் மூத்த அதிகாரிகளின் வீடியோவைப் பகிர்ந்திருந்தார்.

இந்த வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் அனைவரும் பகிர்ந்து அந்த வீடியோவில் நடனமாடியவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT