டிக் டாக் மூலம் பிரபலமான கேரள சிறுமி ஆருனி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் 9 வயதான ஆருனி குருப். இவர் டிக் டாக் செயலியில் திரைப்பட வசனங்களைப் பேசி அதனைப் பதிவிட்டு பெரும் ரசிகர் கூட்டத்தைப் பெற்றார். வீடியோக்களில் அவர் வெளிப்படுத்தும் முக பாவங்கள் மலையாள கதாநாயகிகளுக்கு இணையாக இருந்ததால் ஆருனி வெகு விரைவாகப் பிரபலம் அடைந்தார்.
இந்நிலையில் ஆருனி மூளையில் ஏற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதில் வெள்ளிக்கிழமை திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்ஐடி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஆருனியின் தந்தை கடந்த வருடம்தான் உயிரிழந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆருனியின் மரணம் கேரளாவில் டிக் டாக் பயன்பாட்டாளர்களிடமும், அவரது ரசிகர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ளனர்.