என்னென்ன தேவை?
பிஞ்சு சுண்டைக்காய் - 8 டேபிள் ஸ்பூன்
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று
தேங்காய்ப் பால் அல்லது பால் - கால் கப்
சோள மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - ஒரு டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
தக்காளியை வெந்நீரில் போட்டு ஐந்து நிமிடம் கழித்துத் தோல் நீக்கி, அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் வெண்ணெய் போட்டு, அது உருகத் தொடங்கியதும் மெலிதாக நறுக்கிய வெங்காயம், சுண்டைக்காயைப் போட்டு வதக்கி, அரை கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளுங்கள். காய்கள் வெந்ததும் தக்காளி விழுது, தேங்காய்ப் பால் அல்லது பால் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். ஒரு கொதி வந்ததும் சோள மாவைக் கரைத்து ஊற்றி, மிளகுத் தூள் சேர்த்து கொதிவந்ததும் இறக்கி, மல்லித் தழை தூவினால் சுண்டைக்காய் சூப் தயார்.
ராஜகுமாரி