சமையலறை

புரட்டாசி படையல்: அக்கார அடிசில்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

தினை அரிசி - ஒரு கப்

பாசிப் பருப்பு - அரை கப்

பால் - 3 கப்

வெல்லம் பொடித்தது - இரண்டரை கப்

நெய் - அரை கப்

முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை - தலா 10

ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

தினை அரிசி, பாசிப் பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் தண்ணீர்விட்டுக் களைந்து, அதனுடன் 3 கப் பாலைச் சேர்த்து குக்கரில் வேகவையுங்கள். 3 விசில் வந்ததும் இறக்கிவையுங்கள். சூடு ஆறியதும் குக்கரைத் திறந்து சாதத்தை ஒரு குழிக்கரண்டியின் அடிபாகத்தால் மசித்துவிடுங்கள்.

பொடித்த வெல்லத்துடன் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். வெல்லம் நன்றாகக் கரைந்ததும் வடிகட்டி, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். கெட்டியானல் போதும், பாகு பதம் தேவையில்லை. வேகவைத்திருக்கும் சாதத்தை இந்த வெல்லக் கரைசலில் சேர்த்துக் கிளறுங்கள். இப்போது பாதி நெய்யை ஊற்றுங்கள். எல்லாம் சேர்ந்து கெட்டியானவுடன் அடுப்பை அணைத்துவிடுங்கள். மீதியுள்ள நெய்யைச் சூடாக்கி அதில் முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த் தூள், உலர் திராட்சை ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து, அக்கார அடிசிலில் கொட்டிக் கிளறுங்கள்.

என் அம்மா இதற்கு 3 கப் வெல்லம் போட்டுச் செய்வார்கள். வெல்லம் அதிகமாகப் போட்டால் நெய்யும் அதிகமாகச் சேர்க்க வேண்டும். இனிப்புப் பிரியர்கள் 3 கப் வெல்லம் போட்டு, நெய்யும் இன்னும் ஒரு கால் கப் அதிகமாக விட்டுச் செய்யலாம். சுவை அள்ளிக்கொண்டு போகும்.

SCROLL FOR NEXT