சமையலறை

தலைவாழை: குடல் குழம்பு

செய்திப்பிரிவு

தொகுப்பு: பி.டி.ரவிச்சந்திரன்

சமையல் ருசிக்க தினம் தினம் விருந்து படைக்க வேண்டும் என்பதில்லை. அன்றாடச் சமையலைக்கூடக் கொஞ்சம் சிரத்தையுடன் பாரம்பரியமும் புதுமையும் கலந்து சமைத்தால் உணவு வேளை இனிதாகும். பலருக்கும் தெரிந்த உணவைப் புதுச் சுவையுடன் சமைக்கக் கற்றுத்தருகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த வசந்தா.

குடல் குழம்பு

என்னனென்ன தேவை?

ஆட்டுக் குடல் - ஒன்று, சோம்பு - 2 டேபிள் ஸ்பூன், சீரகம் - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், பட்டை - 4 துண்டு, கிராம்பு - 6, ஏலக்காய் - 4, மிளகு - 1 டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 1 கப், வெள்ளைப் பூண்டு - எட்டுப் பல், இஞ்சி - 25 கிராம், சின்ன வெங்காயம் நறுக்கியது - ஒரு கப் பெரிய வெங்காயம் - 2, எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தக்காளி - 3, மிளகாய்த் தூள் - 3 டேபிள் ஸ்பூன், மல்லித் தூள் - 5 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. புளி - சிறிதளவு

எப்படிச் சமைப்பது?

சோம்பு, சீரகம், மஞ்சள் தூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, தேங்காய்த் துருவல், பூண்டு, இஞ்சி, ஒரு கப் சிறிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து, இரண்டு வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு தக்காளியைச் சேர்த்து வதக்கி, சுத்தம் செய்த குடலைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்க வேண்டும். குடல் வெந்த பிறகு மிளகாய்த் தூள், மல்லித் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றிக் கலந்து மூடிவைத்து 20 நிமிடம் வேகவைக்க வேண்டும். குடல் நன்றாக வெந்த பிறகு ஒரு எலுமிச்சை அளவு புளியைக் கரைத்து ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும்.

SCROLL FOR NEXT