சமையலறை

தலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து - பெப்பர் சிக்கன் மசாலா

செய்திப்பிரிவு

தொகுப்பு, படங்கள்: வி.சாமுவேல்

எப்போதும் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்மை நாமே உணரவும் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தவைதாம் பண்டிகைகள்.

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் என்றாலும் அனைத்துமே மகிழ்ச்சியையும் மனித நேயத்தையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்டவை. இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையும் அன்பையும் சமாதானத்தையும் பரப்பத் தவறுவதில்லை.

அவற்றுடன் சேர்த்து நாவூறச்செய்யும் பலகாரங்களையும் சேர்த்தே இந்தப் பண்டிகை நமக்குப் பரிசாகத் தருகிறது. கிறிஸ்துமஸ் நாளன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த வி. செல்வி.

பெப்பர் சிக்கன் மசாலா

என்னென்ன தேவை?

கோழிக்கறி - ஒரு கிலோ,
பட்டை, லவங்கம் - சிறிதளவு
கரம் மசாலாத் தூள், சிக்கன் மசாலா,
மிளகுத் தூள் - தலா ஒரு டீஸ்பூன்
சீரகம், தனியா, சோம்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா கால் கிலோ, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சீரகம், மிளகு, சோம்பு, தனியா நான்கையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றிச் சூடான பிறகு அதில் பட்டை, லவங்கத்தைப் போட வேண்டும். பிறகு வெங்காயத்தைப் போட்டுச் சிவக்கும்வரை வதக்க வேண்டும். அதன் பிறகு தக்காளியைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

தீயைக் குறைத்து இஞ்சி - பூண்டு விழுதைப் போட்டு வதக்கிய பின், அதில் கறித் துண்டுகளைப் போட வேண்டும். சிறிது நேரம் வதக்கி, அரைத்து வைத்த மசாலாவையும், சிக்கன் மசாலாவையும் போட்டுக் கிளற வேண்டும். தேவையான அளவு உப்பும், தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து, கறி வெந்த நிலையில் கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத் தூள் ஆகியவற்றைத் தூவி இறக்க வேண்டும்.

SCROLL FOR NEXT