அல்வா மட்டுமல்ல திருநெல்வேலியின் அடையாளம். அந்த மண்ணுக்கே உரித்தான இன்னும் ஏராளமான சிறப்பு உணவு வகைகள் இருக்கின்றன. செய்வதற்கு எளிமையாகவும் சுவையில் வலிமையாகவும் ஆரோக்கியத்தில் அக்கறையாகவும் இருக்கும் நெல்லை உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் பெருமாள்புரத்தைச் சேர்ந்த கமலா மூர்த்தி.
தாளகக் குழம்பு
என்னென்ன தேவை?
புளி - 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் பூசணி - 1 கப்
வெண்டைக்காய்,
அவரைக்காய் – தலா 5
கேரட் - 1
சேனை, சேம்பு - சிறிது
வாழைக்காய் – 1
கத்தரிக்காய் - 2
மஞ்சள் பொடி, உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
எள் - 4 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 10
துவரம் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கப்
பச்சரிசி - 4 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - கால் கப்
தாளிக்க: நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எப்படிச் செய்வது?
வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். காய்கறிகளை நறுக்கிக் கொள்ளுங்கள். காய்கறிகளை குக்கரில் போட்டு அதில் புளிக் கரைசல், வறுத்த பொடி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து மூடி, 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். குக்கர் சூடு ஆறியதும் திறந்து நல்லெண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, குழம்பில் சேர்த்துப் பரிமாறுங்கள்.
கமலா மூர்த்தி