என்னென்ன தேவை?
தோல் நீக்கிய கருணைக் கிழங்கு (சேனைக் கிழங்கு) – 1 கப்
பாசிப்பருப்பு – கால் கப்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறு துண்டு
நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மிளகாய் வற்றல் – 2
புளி – எலுமிச்சை அளவு
எப்படிச் செய்வது?
சேனைக் கிழங்குத் துண்டுகளுடன் பாசிப்பருப்பைச் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் போட்டு வேகவைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், இஞ்சித் துண்டுகள், கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். அதில் உப்பு போட்டு கரைத்துவைத்துள்ள புளிக் கரைசலை ஊற்றுங்கள். புளிக் கரைசல் நன்றாகக் கொதித்ததும் வேகவைத்த பருப்புக் கலவையைச் சேர்த்து நன்றாகக் கலந்துவிடுங்கள். அனைத்தும் நன்றாகச் சேர்ந்து கொதித்ததும் கறிவேப்பிலையைத் தூவி இறக்குங்கள்.