சமையலறை

ஆவாரம்பூ சாம்பார் பொடி

ப்ரதிமா

உறவினர் வீடுகளுக்கும் சுற்றுலாவுக்கும் செல்வதற்கோ வற்றல், வடாம், ஊறுகாய் போன்றவற்றைச் செய்வதற்கோ மட்டுமல்ல கோடை. தானிய வகைகளையும் மருந்துப் பொருட்களையும் சித்திரை வெயிலில் உலர்த்தித் தேவையான பொடிகளை அரைத்து வைப்பதற்கும் கோடைக்காலமே சிறந்தது. “மாறிவரும் உணவுப் பழக்கத்தால் பலரும் பலவிதமான உடல்நலப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதனால், உடலுக்கு நன்மை தருகிறவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். அவற்றைப் பொடியாக அரைத்துவைத்துக் கொண்டால் இன்னும் சிறப்பு” என்று சொல்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில பொடி வகைகளைச் செய்வதற்கும் அவர் கற்றுத்தருகிறார்.

ஆவாரம்பூ சாம்பார் பொடி

ஆவாரம்பூ - 50 கிராம்

மல்லி (தனியா) - 1 கிலோ

மிளகாய் - அரை கிலோ

துவரம் பருப்பு - 200 கிராம்

கடலைப் பருப்பு - 100 கிராம்

மிளகு, சீரகம் - தலா 40 கிராம்

வெந்தயம் - 10 கிராம்

விரலி மஞ்சள் - 8

ஆவாரம்பூவைச் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) சுத்தம்செய்து நன்றாக காயவைத்துக்கொள்ளுங்கள். மற்ற பொருட்களையும் தனித் தனியே நன்றாகக் காயவைத்துக்கொள்ளுங்கள். மல்லி, மிளகாய், மஞ்சள் தவிர்த்து மற்ற பொருட்களை வெறும் வாணலியில் தனித் தனியாக வறுத்துக்கொள்ளுங்கள். வறுத்ததும் அனைத்தையும் ஒன்றாக மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும். சாம்பார் வைக்கும்போது பெருங்காயம் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆவாரம்பூவை மருந்தாகப் பயன்படுத்துவதைவிட தினசரி உணவுடன் சேர்த்துப் பயன்படுத்தினால் பலன் அதிகம்.

SCROLL FOR NEXT