ஓடிடி விமர்சனம்

The Boys: ஏழு ஆண்டு கால எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் | ஓடிடி திரை அலசல்

டெக்ஸ்டர்

உலகெங்கும் சூப்பர் ஹீரோக்கள் என்றாலே தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் நல்லவர்கள், உலகைக் காக்கும் ரட்சகர்கள் என்ற பிம்பமே பல ஆண்டுகளாக காமிக்ஸ் தொடங்கி திரைப்படங்கள், கார்ட்டூன்கள், வெப் தொடர்கள் வரை ஆதிக்கம் செலுத்தி வந்தது.

மார்வெல், டிசி போன்ற காமிக்ஸ் நிறுவனங்கள் சூப்பர் ஹீரோக்களின் இந்த தூய்மையான பிம்பத்தை அதன் உச்சத்துக்கு கொண்டு சென்ற தருணத்தில், 2019-ஆம் ஆண்டு வெளியான ‘தி பாய்ஸ்' வெப் தொடர் உலகெங்கிலும் உள்ள சூப்பர் ஹீரோ ரசிகர்களுக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது. 

கார்த் என்னிஸின் புகழ்பெற்ற காமிக்ஸ் கதையை அடிப்படையாகக் கொண்டு எரிக் கிரிப்கே உருவாக்கிய இத்தொடர், சூப்பர் ஹீரோக்களின் இருண்ட பக்கத்தையும், கார்ப்பரேட் அரசியலையும், ரத்தம் தெறிக்கும் வன்முறையுடன் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியது. கடந்த ஏழு ஆண்டுகளாக 5 சீசன்களாக வெளியாகி வந்த நிலையில், இப்போது இத்தொடர் முடிவுக்கு வந்துள்ளது.

இத்தொடரின் கதைக்களம் மிகவும் எளிமையானது. சூப்பர் ஹீரோக்களுக்கு அபரிமிதமான சக்தியும், அதோடு சேர்த்து எல்லையற்ற நற்பெயரும், பெரும் கார்ப்பரேட் பின்னணியும் கிடைத்தால் அவர்கள் எவ்வளவு பெரிய ஆபத்தானவர்களாக மாறுவார்கள் என்பதே ’தி பாய்ஸ்’ தொடரின் ஒன்லைன். இந்த உலகம் இரண்டு எதிர் துருவங்களை மையமாகக் கொண்டு இயங்குகிறது.

ஒருபுறம் Vought இன்டர்நேஷனல் என்ற பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கார்ப்பரேட் நிறுவனம் நிர்வகிக்கும் உலகின் முதன்மை சூப்பர்ஹீரோ குழுவான 'தி செவன்' இருக்கிறது. இதன் தலைவன் ஹோம்லேண்டர் என்பவன் சூப்பர்மேன் போன்ற கட்டுக்கடங்காத சக்தியும், கேப்டன் அமெரிக்காவின் தேசபக்தியும் கொண்டவன் என்றாலும், உள்ளுக்குள் அவன் ஒரு கொடூரமான சைக்கோ. இவர்களை அழித்தொழிக்க ‘தி பாய்ஸ்’ என்ற சூப்பர் ஹீரோக்களால் பாதிக்கப்பட்ட சாமானிய மனிதர்களின் ரகசியக் குழு களமிறங்குகிறது. 

இதன் தலைவன் பில்லி புட்சர், ஹோம்லேண்டரால் தன் மனைவிக்கு நேர்ந்த கொடூரத்துக்கு பழிவாங்கத் துடிக்கும் ஒரு முரடன். ஏ-ட்ரெய்ன் என்ற சூப்பர்ஹீரோவால் தன் காதலி தன் கண்முன்னே கொடூரமாக இறப்பதைக் காணும் ஹியூகி காம்ப்பெல், புட்சரோடு இணையும்போது கதை சூடுபிடிக்கிறது.

தொடக்க சீசன்களில் இத்தொடரின் திரைக்கதை அமைப்பு ஒரு மாஸ்டர்க்ளாஸ் ஆக திகழ்ந்தது. ஒவ்வொரு எபிசோடிலும் அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பும், கார்ப்பரேட் கலாச்சாரத்தை எள்ளி நகையாடும் நையாண்டியும் சம அளவில் கலந்திருந்தன. வழக்கமான சூப்பர் ஹீரோ கதைகளில் ஹீரோக்கள் குற்றவாளிகளை தண்டிப்பார்கள்.

ஆனால் இங்கே, சூப்பர் ஹீரோக்கள் செய்யும் கொடூரமான குற்றங்களை வோட் நிறுவனம் எப்படி தனது பிஆர் மற்றும் ஊடக பலத்தைக் கொண்டு மறைக்கிறது, எப்படி அவர்களை ஒரு பிராண்ட் ஆக மாற்றி பணம் சம்பாதிக்கிறது என்பதை திரைக்கதை மிக துல்லியமாக விவரித்தது. ஹோம்லேண்டரின் விபரீதமான மனநிலை, பாசத்துக்கு ஏங்கும் அவனது ஆழ்மன போராட்டம், பில்லி புட்சரின் புத்திசாலித்தனமான நகர்வுகள் ஆகியவை திரைக்கதைக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தன.

முதல் மூன்று சீசன்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்குக் கொண்டு சென்றன. வெறும் ஆக்‌ஷன் தொடராக இல்லாமல், சமகால அமெரிக்க அரசியல், வலதுசாரி - இடதுசாரி தீவிரவாதம், சமூக ஊடகங்களின் போலித்தனம் போன்ற நவீன உலகப் பிரச்சினைகளைத் திரைக்கதையில் இணைத்த விதம் பெரும் வரவேற்பை பெற்றது.

சோல்ஜர் பாய் போன்ற கதாபாத்திரங்களின் வருகை கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. ஹோம்லேண்டரை எப்போது வீழ்த்துவார்கள், புட்சரின் பழிவாங்கல் எப்படி முடியும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெரும் ஹைப் ஏற்றியது.

மிக முக்கியமாக சமூக வலைதளங்களில் செய்யப்படும் பிஆர் விளம்பரங்கள் யாரையும் எந்த உயரத்திலும் கொண்டு உட்கார வைக்கும் என்பதை இத்தொடரின் காட்சிகள் முகத்தில் அறைந்தது போல் சொல்லியது. இதில் வரும் கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் சமகால அரசியலுடன் ஒப்பிட்டுப் பார்க்க இயலும். அல்லது இத்தொடரின் காட்சிகள் நிச்சயம் நம் கண்முன்னே இப்போது நடந்து கொண்டிருப்பவற்றை நினைவுக்கு கொண்டு வரும். 

இப்படி சென்று கொண்டிருந்த இத்தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி சீசன், இந்த ஏழு ஆண்டு காலப் பயணத்துக்கு ஒரு பிரம்மாண்டமான முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பிய ரசிகர்களுக்கு, சுமாரான அனுபவமாகவே அமைந்துள்ளது. முந்தைய சீசன்களின் அதே இழுத்தடிப்பு இதிலும் தொடர்ந்திருக்கிறது.

வோட் நிறுவனத்தின் புதிய சதிகள், வெள்ளை மாளிகையைக் கைப்பற்றத் துடிக்கும் ஹோம்லேண்டரின் வெறி, பிரெஞ்சி கதாபாத்திரத்தின் மரணம் என பல திருப்பங்கள் எட்டாவது எபிசோடை நோக்கி பாதை அமைத்தாலும், பல முக்கிய கதாபாத்திரங்களின் கதையோட்டங்கள் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது போலத் தோன்றியது.

குறிப்பாக, ‘தி பாய்ஸ்’ தொடரின் ஸ்பின் - ஆஃப் ஆன 'ஜென் வி' தொடரின் கதாபாத்திரங்களை இதனுடன் இணைத்த விதம் எந்த பலனும் தராமல் பலவீனமாக முடிந்தது தொடரின் மீதான சுவாரஸ்யத்தைக் குறைத்தது. இப்படி ஒரு சப்பையான க்ளைமாக்ஸுக்கு எதற்காக ‘ஜென் வி’ என்ற பெயரில் இரண்டு சீசன்களை எடுக்க வேண்டும், எதற்காக பெட்டிக்குள் அடைக்கப்பட்ட சோல்ஜர் பாய் கதாபாத்திரத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் போன்ற கேள்விகள் எழுகின்றன.

'பிளட் அண்ட் போன்' என்ற தலைப்பில் வெளியான கடைசி எபிசோட், ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. பல கேள்விகளுக்கு இதில் பதில் அளிக்கப்படவே இல்லை. தொடரை முடிக்க வேண்டுமே என்ற அவசரம் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. எனினும் ஹோம்லேண்டர் - பில்லி புட்சர் இடையிலான இறுதி மோதல் காட்சி, காமிக்ஸுக்கு நெருக்கமாக, சினிமாடிக் தருணமாக படமாக்கப்பட்டிருந்தது.

சூப்பர் பவர் பறிபோன பிறகு ஹோம்லேண்டர் பறக்க முடியாமல் தவிக்கும் காட்சிகளும், அந்த கதாபாத்திரத்தின் முடிவும் சிறப்பாக இருந்தாலும், ஐந்து சீசன்களாக கட்டமைக்கப்பட்ட ஹைப்புக்கு, ஒரு பிரம்மாண்ட போரை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த கிளைமாக்ஸ் மிகவும் சிம்பிளாகவும் பட்ஜெட் சுருக்கத்துடனும் இருந்தது பெரும் ஏமாற்றம். ‘அவெஞ்சர்ஸ்’ கிளைமாக்ஸ் பாணியில் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது மிகவும் சுமாராகவே தோன்றும். ஹோம்லேண்டரின் மரணத்துக்குப் பிறகு காட்சிகள் அனைத்தும் எதிர்பார்த்தபடியே அமைந்து தொடர் அவசரமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு சிறந்த தொடராக இருந்தாலும் அதன் இறுதிப் பகுதிகள் கதையை ஒரு தர்க்கரீதியான முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் 'தி பாய்ஸ்' கோட்டை விட்டுள்ளது என்றே சொல்லவேண்டும்.

ஒவ்வொரு சீசனிலும் பாய்ஸ் குழு ஹோம்லேண்டரைக் கொல்ல ஒரு திட்டத்தைத் தீட்டுவதும், இறுதியில் ஏதோ ஒரு காரணத்தால் அந்தத் திட்டம் தோல்வியடைந்து, மீண்டும் அடுத்த சீசனில் கதை ஜீரோவுக்கு திரும்புவதும் வாடிக்கையாக இருந்தது. மூன்றாவது சீசனுக்குப் பிறகு இது திரைக்கதையின் சுவாரஸ்யத்தைக் குறைத்து, கதையின் பயணத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்ற சலிப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது.

ஆரம்பத்தில் புத்திசாலித்தனமாக காட்டப்பட்ட புட்சர், போகப்போக வெறும் பிடிவாதக்காரராக மட்டுமே காட்டப்பட்டார். பிரெஞ்சி, கிமிகோ போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் பிரதான கதைக்கு எந்த வலுவும் சேர்க்காமல், வெறும் நேரத்தை இழுத்தடிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

மேலும், ஆரம்பத்தில் கதையோடு ஒன்றிய ரத்தக் களரியும் வன்முறையும், பிற்காலத்தில் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக மட்டுமே திணிக்கப்பட்டது போல தோன்றியது. கதையின் ஆழத்தை விட அருவருப்பான காட்சிகளுக்கே எழுத்தாளர்கள் முக்கியத்துவம் தந்தனர். 

'தி பாய்ஸ்' தொடர் ஒரு புரட்சிகரமான தொடக்கமாகவே அமைந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சூப்பர் ஹீரோ ஜானரையே தலைகீழாக மாற்றிப் போட்ட பெருமை இதற்கு எப்போதும் உண்டு. ஆனால் இறுதி சீசன்களில் தொடர் அதன் ஆன்மாவை தொலைத்துவிட்டது என்பதே உண்மை.

ஒரு முறையான திருப்திகரமான கிளைமாக்ஸை நோக்கி நகராமல், வணிக நோக்கத்துக்காக இழுத்தடிக்கப்பட்டதால், ஒரு க்ளாசிக் தொடராக மாற வேண்டிய 'தி பாய்ஸ்' ஏமாற்றமளித்த ஒரு சராசரித் தொடராக முடிந்தது துரதிர்ஷ்டவசமானது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தமிழிலும் காணக்கிடைக்கிறது.

SCROLL FOR NEXT