‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் இளன் தற்போது ’பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் மூலம் நாயகனாவும் அவதாரம் எடுத்துள்ளார். காதல் வாழ்க்கை, திருமணம், சமூகம் ஏற்படுத்தியுள்ள போலி கட்டமைப்புகள் மீதான கேள்விகளுடன் வித்தியாசமான கதைக்களத்தை கையில் எடுத்துள்ள இளன் தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா என்று பார்க்கலாம்.
கல்யாணம் முடிந்த கையோடு, புதுப்பெண் பவித்ரா (சான்வி மேக்னா) கணவனுடன் புகுந்து வீட்டுக்கு செல்லாமல் ஓட்டம் பிடிக்கிறார். குழப்பமடைந்த கணவன் இளன் (இளன்) அவரை துரத்துகிறார். இத்தைய சுவாரசியமான காட்சியில்தான் படம் தொடங்குகிறது. அதற்குப் பின்வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இருவரைப் பற்றியும் அழகாக விளக்குகின்றன. சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சரான 'பர்ப்பிள் பவி' என்ற பவித்ராவின் வாழ்க்கை காட்டப்படுகிறது.
பெற்றோர், தாத்தா, வளர்ப்பு நாய் என எல்லாரையும் கவனித்துக்கொண்டு தன் பொறுப்புகளை அன்போடு செய்யும் ஒரு பெண் அவர். மறுபுறம் இளன், துபாயில் வேலை பார்க்கும் சிவில் இன்ஜினியர். அம்மாவின் மொறுமொறு தோசைக்காக வேலையை விட்டுவிட்டு ஓடிவரும் அளவுக்கு பொறுப்பற்ற நபர். இந்த இருவருக்கும் இடையே தொடங்கும் காதல், திருமணமாக மாறும்போது முக்கியமான சிக்கல் எழுகிறது. அதிலிருந்து இருவரும் எப்படி மீண்டனர் என்பதே படத்தின் கதை.
ஒரு மனிதனுக்கு வீடு என்பது வெறும் நான்கு சுவர்கள் கொண்ட கட்டிடம் அல்ல. அது அவன் வேரூன்றி வளர்ந்த இடம், உலகம் வீழும்போது அமைதி தரும் புகலிடம். ஆனால், நம் சமூகத்தில் திருமணத்திற்குப் பின் பெரும்பாலான பெண்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது. அவர்கள் தங்கள் வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறுவது மட்டுமன்றி, தங்கள் சொந்த அடையாளத்தையும் கனவுகளையும் இழந்து புகுந்த வீட்டுக்கு செல்லும் மரபு இந்தியாவில் இப்போதும் அனைத்து சமூகங்களிலும் தொடர்கிறது
இந்த சமூகப் பழக்கத்தை மையமாகக் கொண்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய சமூகக் கருத்துப் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார் இளன். பாக்யராஜ், விசு, வி.சேகர் போன்ற இயக்குநர்கள் குடும்ப அமைப்பில் உள்ள தவறுகளை நகைச்சுவையாக விமர்சித்து வெற்றி பெற்றுள்ளனர்.
ஆனால், சமூக விமர்சனத்தையும் நகைச்சுவையையும் ஒரே கோட்டில் நேர்த்தியாகவும் கொண்டுசெல்ல கதாபாத்திர வடிவமைப்பில் ஆழம் தேவை. ஆனால் இந்த படத்தில் அது மிஸ்ஸிங். படத்தில் பவியும் இளனும் நிஜ மனிதர்களைப் போல இல்லாமல், சினிமாவுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ‘க்யூட்’ பொம்மைகள் போல உலவுகிறார்கள்.
இன்றைய தலைமுறைக்குப் பிடிக்க வேண்டும் என்று, சமூக வலைதளங்களிலேயே காலாவதியான மீம்களையும் சினிமா ரெஃபரன்ஸ்களையும் படம் முழுவதும் வலிந்து திணித்திருக்கிறார்கள். படத்தின் இடைவேளையின்போது 'முதல்வன்' படத்தின் நேர்காணல் காட்சியை ஒரு மீம் மெட்டீரியல் போல பயன்படுத்தி, கதாபாத்திரங்கள் அதே வசனங்களைப் பேசுவது மிகவும் செயற்கையாக உள்ளது. மொத்த படத்தையும் சோஷியல் மீடியா'கன்டென்ட் ஆக மாற்ற மெனக்கெட்டு காட்சிகளை அமைத்தது போல தோன்றுகிறது.
நடிகராக இளன் நம்பிக்கை அளிக்கிறார். ஆங்காங்கே சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் முழுமையாக ஒதுக்கி தள்ளிவிட முடியாத நடிப்பை தந்திருக்கிறார். சான்வி மேக்னா குறையில்லாத நடிப்பை வழங்கியிருந்தாலும், சென்னைப் பெண் என்ற கேரக்டரில் அவர் பேசும் தமிழ் ஒட்டாமல் நிற்கிறது. யோகி பாபுவின் 'ஆணாதிக்கக் கணவன்' கேரக்டரில் நகைச்சுவை பெரிதாக எடுபடவில்லை. ராதிகா சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் வழக்கம்போல தான் வரும் காட்சிகளில் தங்களது அனுபவமிக்க நடிப்பால் ஸ்கோர் செய்கின்றனர்.
பவித்ராவின் வீட்டுக்கு இளன் ‘வீட்டோட மாப்பிள்ளை’ ஆக செல்லும்போது, வேலை இருந்தால்தான் ஆணுக்கு மரியாதை என்ற கருத்தை நகைச்சுவை என்ற பெயரில் தவறாகக் கையாள்வது போல தோன்றுகிறது. அதேபோல வீட்டில் பாத்திரம் கழுவும் இளனை பார்த்து, அவரது தாய் அவரைப் பெண் உடையில் கற்பனை செய்து பார்ப்பது போன்ற காட்சிகள் மிகவும் மோசமான சிந்தனை.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஜி.வி.பிரகாஷ் பாடிய 'லவ் இஸ் பியூட்டிஃபுல்' பாடல் ஈர்க்கிறது. தினேஷ் கே.பாபுவின் ஒளிப்பதிவு கண்களுக்கு கலர்ஃபுல் விருந்து.
ஒரு நல்ல சமூகக் கருத்தைக் கையில் எடுத்து, அதை சோஷியல் மீடியா கன்டென்ட் போல மாற்றியதில் 'பியார் பிரேமா கல்யாணம்' பெரிதும் தடுமாறி இருக்கிறது. எடுத்துக் கொண்ட கதைக்களத்துக்கு ஏற்ப கூர்மையான திரைக்கதையை எழுதியிருந்தால் ஒரு நல்ல ஃபீல் குட் படம் கிடைத்திருக்கும். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது.