சீனியர் மலையாள இயக்குநர்கள் நேரடித் தமிழ்ப் படங்கள் இயக்கிய காலம் போய், இப்போது ஜூனியர் மலையாள இயக்குநர்கள் நேரடித் தமிழ்ப் படம் இயக்கி வெற்றி கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ‘தம்பி தலைவர் தலைமையில்’ கொடுத்த நிதிஷ் சகாதேவ் ஓர் எடுத்துக்காட்டு. இந்த வரிசையில் ஜூனியர் மலையாள இயக்குநர்கள் நேரடித் தமிழ் இணையத் தொடர்கள் எடுக்க வந்துவிட்டார்கள்.
முனீஸ்காந்த் மற்றும் மலையாளத்தின் குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான ராஜேஷ் மாதவன் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, சுபாஷ் செல்வம் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘காக்கி சர்க்கஸ்’ நேரடித் தமிழ் இணையத் தொடர் மூலம் தமிழில் இயக்குநராகக் கால் பதித்திருக்கிறார் அமீன் பாரீஃப்.
ஜீ5 தளத்தின் அசல் உள்ளடக்கங்களில் சமீப காலமாகக் குறைந்த பட்ஜெட்டில் நல்ல கதையம்சத்துடன் கூடிய இணையத் தொடர்கள் வெளிவந்தபடி இருக்கின்றன. கடந்த பிப்ரவரியில் சமுத்திரக்கனி நடிப்பில் நவீன்குமார் பழனிவேல் எழுத்து இயக்கத்தில் ‘தடயம்’ வெளியானது. நல்ல கதை, நடிக்கத் தெரிந்த நடிகர்களின் தரமான பங்களிப்பு என அந்தத் தொடர் ஈர்த்தது. தற்போது அதே பாணியில் குறைந்த பட்ஜெட்டில் நிறைவான திரை அனுபவம் தரும் தொடராக ‘காக்கி சர்க்க’ஸை கொடுப்பதில் அமீன் பாரீஃப் வெற்றிபெற்றாரா என்று பார்ப்போம்.
தமிழக - கேரள எல்லைப்பகுதியில் உள்ள ‘கண்ணகியாண்டாள்புரம்’ என்கிற சிறு நகரத்தில் கதை நடக்கிறது. அந்த ஊரின் முக்கிய அடையாளங்களில் ஒன்று அங்குள்ள கிளைச் சிறை. அந்தச் சிறையில் இருக்கும் கண்ணகிக்கான சிறு சிலை, அதன் கீழே ஒரு உண்டியலும் இருக்கிறது. அன்புச்செல்வன் (முனிஷ்காந்த்) ஓய்வுபெறக் காத்திருக்கும் அந்தச் சிறையின் கண்காணிப்பாளர். அந்தச் சிறைக்கும் வரும் கைதிகள் நல்ல புத்தகங்களில் ஒன்றையாவது வாசித்தால், அதுவே அவர்களைச் சீர்திருத்திவிடும் என்று நம்புகிறார்.
இதற்காக, சிறைக்கு வந்துசேரும் ஒவ்வொரு கைதிக்கும் இரண்டு புத்தகங்களைக் கொடுப்பார். ஒன்று அன்புச் செல்வன் குவித்து வைத்திருக்கும் நூல்களிலிருந்து ஒன்றைக் கைதிகளின் வயது மற்றும் அவர்கள் செய்த குற்றத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார். இன்னொன்று தான் எழுதிய புத்தகத்தையும் கொடுப்பார். அன்புச்செல்வனுக்கு கீழே பணியாற்றும் சிறைக் காவலரான அர்ஜுன் (சுபாஷ் செல்வம்), கைதிகளைச் சிறையில் குழந்தைகள்போல் நடத்தக் கூடாது, சிறை என்பது அவர்களுக்குக் கடுமையானதாக இருக்க வேண்டும் அப்போதுதான் கைதிகளிடம் மாற்றம் வரும் என்று நம்புகிறவர்கள்.
இதனால், கைதிகளுக்கு அன்புச்செல்வன் புத்தகம் கொடுத்துக் கொஞ்சவதை வெறுக்கிறார். இதுவொருபுறம் இருக்க, சிறையில் இருக்கும் கண்ணகி உண்டியலில் கைதியாக உள்ளே வருபவர்களின் கையிலிருந்த காசையெல்லாம்பிடிங்குப் போட்டு வைக்கிறார்கள். அதை அருகிலுள்ள கேரளத்தின் கண்ணகி கோயில் ஒன்றுக்குத் திருவிழா நேரத்தில் காணிக்கையாக எடுத்துக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது சிறை நிர்வாகம்.
கைதிகளும் தாராளமாக அந்த உண்டியலில் பணம் போடுவதற்குக் காரணம், கண்ணகி தெய்வம் ஒருமுறை ஒரு கொடூரமான சிறைக்காவலரைத் தண்டித்து, ‘கைதிகளைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்து’ என்று கனவில் வந்து உத்தரவிட்டதாகவும் அன்று முதல் இங்கே வரும் கைதிகள் திருந்திச் செல்வதாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இங்கே வரும் கைதிகளால் எந்தச் சிக்கலும் இல்லாமல் இருப்பதற்கு அந்தக் கண்ணகி சிலையும் உண்டியலும்தான் என்று சிறை அதிகாரிகளும் நம்புகிறார்கள். எழுத்தாளராகவும் சிறைக் கண்காணிப்பாளராகவும் இருக்கும் அன்புச் செல்வனுக்குக் கண்ணகியின் ‘அறம்’ இன்னும் அதிக நம்பிக்கையைக் கொடுத்துவிடுகிறது.
இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான சூழல் நிலவும் சிறையில் அந்தக் கண்ணகி உண்டியலை, சிறைக்குள் ஏறிக் குதித்து யாரோ திருடிக்கொண்டு போய்விடுகிறார்கள். கோயிலுக்குத் திருவிழா நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் அந்த உண்டியல் திருட்டைக் கண்டுபிடித்தே ஆக வேண்டிய கட்டாயம் அர்ஜுனுக்கும் அன்புச்செல்வதுக்கும் ஏற்படுகிறது. அதன்பின் திருவாளர் உண்டியல் திருடரைக் கண்டறியும் அவர்களின் புலன் விசாரணையில் சந்தேகப்படும் நபர்கள் யார், அவர்களை அவர்கள் எப்படி நெருங்கினார்கள், உண்மையான திருடனை அவர்களால் நெருங்க முடிந்ததா என்பதை நோக்கித் தொடர் நகர்கிறது.
தொடரின் கதை நேரடியாக இருந்தாலும் கதாபாத்திரங்களை அட்டகாசமாக வடிவமைத்திருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் அமீன் பாரீஃப். ஒரு கதையில் ‘கேரக்டர் ஆர்க்’கை எவ்வளவு சுவாரசியமாக அமைக்கலாம் என்பதற்கு இந்தத் தொடரின் அத்தனை கதாபாத்திரங்களுமே சிறந்த எடுத்துக்காட்டு. ஒவ்வொரு கதாபாத்திரமும் தூய நகைச்சுவை உணர்வு - எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சார்ந்து வெளிப்படுத்தும் கணமான உணர்வு ஆகிய இரண்டையும் அழகாக ‘பேலன்ஸ்’ செய்து கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் நெய்திருக்கிறார்.
மரணங்களை உன்னிப்பாகக் கவனிக்கும் சவப்பெட்டித் தொழிலாளியாக வருகிறார் அப்துல் லீ. அவரது கடையில் நிகழும் ஒரு விபத்து கொலை வழக்காகக் கருதப்பட்டு அவர் விசாரணைக் கைதியாக கண்ணகியாண்டாள்புறம் சிறைக்கு வருகிறார். அவரை அறிமுகப்படுத்தும் காட்சிகளில் வழிந்தோடு நகைச்சுவைக் காட்சிகளுக்குப் பிறகே கதையின் முக்கிய சம்பவம் நிகழ்கிறது. இது தொடக்கத்தில் கதை எதை நோக்கிச் செல்கிறது என்கிற அயர்ச்சியை ஏற்படுத்தினாலும் பேருந்து நடத்துநராக வரும் ராஜேஷ் மகாதேவன் கதாபாத்திரம் உள்ளே நுழைந்ததும் தொடர் சூடு பிடிக்கிறது.
தங்களைச் சுற்றி நடப்பவற்றை காணொளியாக எடுத்து யூடியூப்பில் பதிவிடும் இரு உழைக்கும் வர்க்கப் பெண்களின் பகுதி மிகவும் கலகலப்பானது மட்டுமல்ல; அவர்களை கிளைமாக்ஸில் கொண்டு வந்து இணைத்தவிதம் ‘க்யூட்’!
ஜவுளிக்கடைக்குப் போய் ‘எந்த நிறத்தில் புடவை எடுப்பது என்று கேட்டு வேலைநேரத்தில் தொந்தரவு செய்யும் மனைவி சமாளிக்க முடியாமல் மண்டை காயும் மாவட்ட காவல் ஆணையர் கதாபாத்திரமும் ஓகே!
ஒரு சிறைக் காவலருக்கும் உண்டியல் திருடனுக்கும் இடையிலான கண்ணாமூச்சி ஆட்டம் 4வது எபிசோடிலிருந்து சூடுபிடிக்க, அது போதாதென்று இரண்டு காதல் கதைகளை விசாரணைக் களத்துக்குள்ளேயே பொருத்தமாக இணைத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர்.
காதல், பலவீனம், புத்திசாலித்தனம், ஆக்ஷன் என அர்ஜுன் கதாபாத்திரம் நாயகப் பிம்பத்துடன் எழுதப்பட்டிருந்தாலும் சில இடங்களில் தோய்ந்து விழுவதும் நடந்துவிடுகிறது. என்றாலும் தனது கதாபாத்திரத்துக்கான முக்கிய தருணங்களை நடிப்பில் நன்றாகவே கொண்டு வந்திருக்கிறார் சுபாஷ் செல்வம்.
அர்ஜுன் கதாபாத்திரத்தை விட முனிஷ்காந்தின் கதாபாத்திரத்தை அழுத்தமாகக் கையாள வேண்டும் என்பதில் இயக்குநர் அதிக அக்கறை காட்டியிருக்கிறார். முனீஷ்காந்தும் தனது நகைச்சுவையின் எல்லை இந்தக் கதையிலும் ஏற்ற கதாபாத்திரத்திலும் அளவோடு இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து ஏற்ற கதாபாத்திரத்தின் ஆன்மாவைத் தன் நடிப்பால் அழகாகத் தாங்கிப் பிடித்திருக்கிறார்.
ஒரே பெருங்குறை, மலையாள சினிமா ராஜேஷ் மாதவனை எப்படி ‘டைப் காஸ்ட்’ செய்து வந்துள்ளதோ அதையே தமிழிலும் அவரைச் செய்ய வைத்திருப்பது. என்றாலும் தன்னுடைய கதாபாத்திரத்தின் நுணக்கமான குணங்களைக் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
சிறை அதிகாரி, சிறைக் காவலர், சிறைக்குள் இருக்கும் வழிபாட்டிடம் மீதான நம்பிக்கை, நாம் எப்படி எண்ணுகிறோமா அப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பதில்லை என்கிற உண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தரமான திரை அனுபவம் கொடுக்க முயலும் இந்தத் தொடர் இன்னும் சற்று வேகமாக எடிட் செய்யப்பட்டிருக்கலாம்.