ஓடிடி விமர்சனம்

Dear Men: இருண்ட உலகமும், சயானி போன்ற மீட்பர்களும்! - திரை தேவதைகள் 04

பாரதி ஆனந்த்
“இங்கு எல்லோருக்கும் கண்கள் இருக்கிறது நவீன். ஆனால், சில விஷயங்கள் தனக்கு நேரும்போதுதான் அது அவர்களை பாதிக்கும்...”
2013-ல் மலையாளத்தில் வெளியான ‘திரா’ படத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த கடத்தப்பட்ட பெண் குழந்தைகளை மீட்கும் மிஷனில் ஈடுபட்டிருக்கும் நடிகை ஷோபனா கதாபாத்திரம் பேசும் வசனம் இது.

தனது சகோதரியை மீட்க சமூக செயற்பாட்டாளரான ஷோபனாவுடன் இணைந்து பயணிக்கும் இளைஞனிடம், பெண் குழந்தைகள் கடத்தல்கள் எப்படி நடக்கின்றன, கடத்தப்படும் குழந்தைகளுக்கு என்னவாகிறது, அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று விளக்கும்போது இந்த வசனத்தை அவர் கூறுவார்.

ஆம், நாம் வாழும் இதே உலகின் பக்கவாட்டில் வக்கிரங்கள் நிறைந்த இன்னொரு ‘டார்க் வேர்ல்டு’ இயங்குகிறது. அது பற்றிய அக்கறை நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது? அந்த ‘டார்க் வேர்ல்டின்’ ஆக்டோபஸ் கரங்களின் ஒன்றான டிஜிட்டல் மோசடிகள் பற்றிய படங்கள் பல மலிந்து அதற்கு வரவேற்பும் கிடைக்கின்றன. தமிழில் ‘இரும்புத்திரை’-யை சுட்டிக்காட்டலாம். காரணம், அத்தியாயத்தின் தொடக்கத்தில் நாம் பேசியதுதான். ‘தனக்கு நேரும்போது...’ என்ற சுயநலம்.

          

ஆள் கடத்தல்... குறிப்பாக பெண் குழந்தைகள், இளம் பெண்கள் கடத்தல் என்பது டிஜிட்டல் மோசடி போல் சமூகம் எங்கும் வியாபித்துக் கிடக்கிறது என்று சொல்ல முடியாவிட்டாலும், நாம் கவனத்தில் கொள்ளும் அளவுக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது.

‘உலகையே உலுக்கும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ என்று செய்திகள் வெளியாகும்போது மட்டும் அதுபற்றிய உரையாடல்களோடு நம்மில் சிலர் முடித்துக் கொள்கிறோம். இன்னும் சிலர் அடிபடுவது வெளிநாட்டுப் பெயர்கள் என்பதால், நமக்கேன் என்று கடந்துவிடுகிறோம்.

வெகு சிலர் மட்டுமே, உலகெங்கிலும் பணமும் அதிகாரமும் கோலோச்சும் பீடங்களில் இப்படி எத்தனை ஆயிரம் பெண் குழந்தைகள் இந்தக் கணம் உட்பட பலியிடப்பட்டுக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கும் போதே வாழ்வு கசக்கிறது (பேஸ்புக் பதிவு) என்று உலுக்கப்பட்ட மனசாட்சியுடன் இதை அணுகுகின்றனர்.

தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகம் 2023-ம் ஆண்டு வெளியிட்ட ஆவணத்தின்படி. 2023-ம் ஆண்டில் நாடு முழுவதும் 12 வயது முதல் 16 வயது உடையோரில் கடத்தப்பட்டவர்கள் புள்ளிவிவரத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

6,286 சிறுவர்கள், 22,145 சிறுமிகள், மாற்று பாலினத்தவர் 1 ஒருவர் என மொத்தம் 28432 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இதில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேம், பிஹார், ஒடிசா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் கடத்தல் அதிகமாக நடந்துள்ளது. தமிழகத்தில் 2 சிறுவர்கள், 32 சிறுமிகள், மாற்று பாலினத்தவர் ஒருவர் என 35 பேர் கடத்தப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 புள்ளிவிவரப்படி இந்தியாவில் கடத்தப்பட்டவர்களில் 44% பேர் மைனர்கள். 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

புள்ளிவிவரங்கள் இவ்வாறாக இருக்க, ஆள் கடத்தல் மீது அங்கொன்றும் இங்கொன்றுமாக மனசாட்சி உலுக்கல்கள் இல்லாமல் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்த, ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட குறும்படம்தான் இயக்குநர் கேத் கோம்ஸின் ’Dear Men'. இந்தக் குறும்படம் யூடியூபில் நேரடியாக வெளியிடப்பட்டது. அதுவும் ஆண்டுதோறும் ஆட்கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் ஆக கடைப்பிடிக்கப்படும் ஜூலை 30 அன்று வெளியிடப்பட்டது.

தீபேஷ் டேங்க், மும்பையைச் சேர்ந்த சமூக நல செயற்பாட்டாளர். இவர், கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சிறுமிகள், பெண்களை மீட்டுள்ளார். பிஹாரில் ‘சிவப்பு விளக்கு’ பகுதி ஒன்றில் ஆவணப்படம் எடுப்பதுபோல் சுற்றித் திரிந்து சிறுமிகள் பலரை இவர் மீட்டார். இதற்காக அவருக்கு ஆளுநர் விருது வழங்கப்பட்டது. அதைத் தழுவியே இந்தக் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.

’டியர் மென்' குறும்படத்தின் நாயகி சயானி குப்தா, Article 15 படத்தில் நடித்தவர். ஏற்கெனவே அழுத்தமான கதைக்களத்துக்கு அறிமுகமானவர் என்பதால் ’Dear Men'-ல் தனது கதாபாத்திரத்தை வெகு நேர்த்தியாகவே கையாண்டிருக்கிறார்.

பிஹாரில் ஒரு குக்கிராமத்தில் படப்பிடிப்புக்காகச் செல்கிறது ஒரு குழு. அதில் ஒருவர் சயானி குப்தா. தன்னை இயக்குநர் ஷிவ் என்று ஊர் ‘பெரியவரிடம்’ அறிமுகப்படுத்திக் கொள்கிறார். லாங் ஷாட்டில் முதன்முறை சயானி குப்தாவைக் காணும்போது நமக்கு நிச்சயமாக எந்த வகையிலும் சந்தேகம் வரவில்லை. ஒப்பனை அவ்வளவு பொருத்தம். அதனால் இயக்குநர் ஷிவ் மீது அந்த ஊர் தலைவர் ராஜாவுக்கும் சந்தேகம் வரவில்லை.

பதின்ம வயது பெண் பிள்ளைகள் சிலர் நடனக் காட்சிக்காக அங்கு வரவழைக்கப்படுகின்றனர். ஆனால் இயக்குநரோ தனது கதைக்குப் பொருத்தமாக 9, 10 வயதில் ஒரு சிறுமி வேண்டும் என்று கூறுகிறார். ஊர் தலைவர் வாக்குறுதியளிக்க அறைக்கு திரும்புகிறது படக்குழு.

குறும்படத்தைக் காணும்போது அறையில்தான் நமக்கு இயக்குநராக வந்தது ஒரு பெண் என்பதே தெரியவரும். வழக்கமாக இதுபோன்ற மீட்பர்களாக ஆண்கள்தான் காட்டப்படுவர். ஆனால், இங்கே சயானி ஆண்போல் வேடமணிந்து நடித்திருப்பார்.

“அர்த்தநாரீஸ்வரரின் பலத்தை பிரதிபலிக்கும் வகையிலும், பெண்களும் கூட இத்தகைய சமூக அநீதிக்கு எதிராக தங்களை ஒரு செயற்பாட்டாளராக மாற்றிக் கொள்ளலாம் என்பதை நிறுவவும் சயானி குப்தாவை நடிக்க வைத்தேன்” என்று இயக்குநர் கேத் கோம்ஸ் பின்னாளில் அளித்த பேட்டியொன்று இங்கே நினைவுகூரத்தக்கது.

‘Dear Men’ குறும்படத்தில் ஒரு காட்சி.

தாங்கள் தேடிவந்த குழந்தை பிஹாரில்தான் இருக்கிறது என்ற ஒரே ஒரு துப்பை மட்டுமே வைத்துக் கொண்டு தேடித் திரியும் ஷிவ் இறுதி முயற்சியாக ராஜாவை அணுகியிருப்பர்.

“ராஜா சமூகத்தில் நன்மதிப்பு உடையவராக இருக்கிறார். நாம் தவறான நபரை பின் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். இனியும் தேட வேண்டாம்” என்று குழுவினர் கூறும்போதுதான், தாங்கள் தேடிவந்த சிறுமியின் தாய் தொலைபேசியில் அழைத்து தனது மகள் கிடைத்துவிட்டாளா என்று ஆதங்கத்தோடு கேட்பாள். ஆனாலும், நாம் வெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் தான். நமக்கு நேரமும், பணமும் இல்லை. மேலும், நாம் போலீஸ் இல்லை என்று சகா ஒருவர் அறிவுரை கூறுவார்.

ஆனால், சமூகத்தில் நன்மதிப்பு கொண்டவர் என்று சான்றிதழ் பெற்றிருக்கும் ராஜா, ஷிவா (சயானியின்) அறைக் கதவைத் தட்டி தன்னுடன் வந்தால் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது என்று கூட்டிச் செல்வார். அந்த சில நிமிடப் பயணம் நம்மை அடுத்து என்ன நடக்குமோ என்று அச்சத்தில் உறைய வைக்கும். அதுவும் வயல்வழியில் சிறுநீர் கழிக்க காரை நிறுத்தும் ராஜா துப்பாக்கியால் சுடுவது என்பது அதிகாரத் திமிரின் உச்சம். நிசப்தமான நேரத்தில் தனது துப்பாக்கிச் சூடு எந்த சலனத்தையும் ஏற்படுத்தாது என்பது போன்ற மமதை.

அடுத்தடுத்து நிகழும் மீட்புக் காட்சிகள் அனைத்துமே அத்தனை திகில் நிறைந்தவை. தான் தேடிவந்த சிறுமியை (கீது) கண்டு கொண்டதும் அறைக்கு திரும்பும் சயானி, போலீஸிடம் நிலைமையை எடுத்துரைப்பார். காவல் துறையின் பதில்கள் பல நேரங்களில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களின் பொறுப்பை எப்படி தட்டிக் கழிக்கிறார்கள் என்பதற்கான உதாரணமாக இருக்கும். “நீங்கள் வராவிட்டால் சமூக வலைதளத்தில் பதிவிடுவேன்” என்று தன்னை ஒரு விசில் ப்ளோயராக ஆக்க சயானி துணியும்போதுதான் காவல் துறை பணியை செய்ய ஒப்புக் கொள்ளும்.

கீது அடைக்கப்பட்டிருந்த இடத்துக்கு காவல் துறையோடு வரும் சயானி, ராஜாவை தன்னந்தனியாக எதிர்கொள்ள நேரிடும். சாவின் விளிம்புவரை சென்றாலும் கூட புன்னகை கொண்ட சிறுமிகள் கடத்தப்பட்டால் அவர்கள் முகத்தில் கண்ணீர் பாயுமே என்ற உந்துதலால் வீறுகொண்டு ராஜாவை துவம்சம் செய்வாள். தேடிவந்த கீதுவை மட்டுமல்லாது நீது உள்பட இன்னும் சில குழந்தைகளையும் மீட்டெடுப்பாள் சயானி. ஆன்மிகத்தை நம்புபவர்களுக்கு ஒரு துர்க்கையைப் போல, ஃபேன்டஸியை நம்புபவர்களுக்கு ஒரு சூப்பர் வுமனைப் போல், பொழுது புலர்கையில் தெரியும் சன்னமான ஒளியில் சூரியனாக மிளிர்வாள்.

வெறும் அரை மணி நேர குறும்படம்தான். பொதுவாகவே இதுபோன்ற படங்கள் பாதிக்கப்பட்ட நபரின் வேதனை சாட்சியாகவே முன்வைக்கப்படும். பெரும்பாலும் வேதனையின் குரலாக ஒலிக்கும்போது அதை நெருங்கவே பலரும் அஞ்சுவர்.

அதனாலோ என்னவோ, ஒரு மீட்பரின் பார்வையில் இருந்து படத்தைக் கொடுப்பது அவசியம் ஏன் என்பதை இயக்குநர் உணர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். எண்ட் கிரெடிட்ஸில், ‘ஆள் கடத்தலுக்கு எதிரான போராளிகளுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்’ என்று இயக்குநர் கூறியிருக்கிறார்.

அது உண்மையில் அவர்களுக்கான சமர்ப்பணம் மட்டுமல்ல, ஆள் கடத்தல் பற்றி அறியாமையில் இருக்கும் சமூகத்தின் மீது பாயும் ஒளிக் கீற்று. நம்மாலும் மீட்பராக இருக்க முடியும் என்ற நம்பிக்கையை கடத்தும் படைப்பு.

தன்னை வேதனைக்கு உள்ளாக்கும் சமூக அவலங்களில் ஒன்று என்பதாலேயே தான் இதை லாப நோக்கோடு அணுகாமல் அனைவரும் காண வேண்டும் என்பதற்காக யூடியூபில் வெளியிட்டதாக இயக்குநர் கேத் கோம்ஸ் கூறியிருந்தார். இத்தனைக்கும் இதில் அலெக்ஸ் சோமர்ஸ் (ஹாலிவுட் கம்போஸர்), ரசுல் பூக்குட்டி (ஆஸ்கர் புகழ் ஒலி அமைப்பாளர்), ஸ்டெஃபான் ரிக்டர் ( சண்டை பயிற்றுநர்) போன்ற பிரபலங்கள் பணியாற்றியுள்ளனர்.

ஆள் கடத்தல் பற்றி வெள்ளித்திரையில் படங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், அவை ஹீரோயிஸத்தை தூக்கிப் பிடிப்பதாகவும், வில்லன் நடிகர்களுக்கு பிரேக் த்ரூ கொடுப்பதாகவும் அல்லது பழி தீர்க்கும் கதைகளாகவேே இருந்திருக்கின்றன.

வணிக ரீதியிலான சினிமாக்களில் சமூகப் பொறுப்பை வலிந்து திணிக்க முடியாது. ஆனால், அதன் வீச்சு அதிகம் என்பதால், குறுகிய காலத்துக்காவது அது ஏற்படுத்தும் தாக்கம் பேசப்படும் விஷயமாக இருக்கும். தமிழில் ‘சித்தா’ வந்தபோது பெண் குழந்தைகளுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல் பற்றி பட்டிதொட்டிகளிலும் கூட விழிப்புணர்வு வந்ததை சுட்டிக்காட்டலாம்.

ஆவணப் படமாக எடுத்தாலும் கூட அதைக் காண்போரின் எண்ணிக்கை விருது விழாக்களோடு நின்று போகும்.

ஆனால், ஒரு குறும்படமாக எடுத்து யூடியூபில் வெளியிடக் காரணத்தை இப்படி அடுக்குகிறார் இயக்குநர்...

“நம் குழந்தைகளை நாம் பாதுகாப்பது அவசியம், ஆனால் பெரும்பாலான இந்தியர்கள் அதுபற்றி அறியாதிருக்கிறார்கள். இந்த குறும்படத்தின் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமூக நலனில் அக்கறையோடு இருக்க வேண்டும் என்ற கருத்தைக் கடத்தவும் முயற்சித்திருக்கிறேன்.”

இதை ஆமோதிக்கும், தீபேஷ் டாங்க் (சமூக செயற்பாட்டாளர்), சிறுமிகள், இளம் பெண்கள் பாலியல் அடிமையாக்கப்பட கடத்தப்படுகிறார்கள் என்ற உண்மையை இந்த சமூகம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய அவசியத்தை ‘Dear Men’ வெற்றிகரமாக நிறுவியுள்ளது என்று சிலாகிக்கிறார்.

ஒரு சயானி, கீதுவுக்கான தேடலில் 3 பெண் குழந்தைகளை மீட்டெடுத்தார். ஆனால், அன்றாடம் நம்மைச் சுற்றி கீது சிக்கியதுபோல் வஞ்சகர்கள் விரிக்கும் வலையில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தில் தான் இருக்கிறார்கள். அதுவும் இணைய உலகில் ஆள் கடத்தல் என்பது இன்ஸ்டா, ஃபேஸ்புக் உரையாடல்கள் மூலம் விட்டில் பூச்சி விளக்கு நோக்கிப் போய்விழுவதுபோல் விழ வைக்கும் பாணியில் நடந்துவிடுகிறது.

நமது மகிழ்ச்சியான உலகத்துக்கு அப்பால் நிகழும் வக்கிரங்களை அறிந்துவைத்துக் கொள்வது, நம்மைச் சுற்றியிருப்பவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். கூடவே சமூக அக்கறை மட்டுமே நாம் மனிதர்கள் என்பதை உறுதி செய்யும். பாலியல் வக்கிரங்கள் மீது பாராமுகம் கொள்ளாமல் இருப்போமாக!

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

SCROLL FOR NEXT