தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் ஜியோ ஹாட்ஸ்டார் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு கடிதத்தில் கையெழுத்திடப்பட்டது.
இது தொடர்பான சென்னையில் நடந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கமல்ஹாசன், தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மோகன்லால், நாகார்ஜுனா, விஜய் சேதுபதி மற்றும் தென்னிந்திய திரை உலக பிரபலங்கள் பங்கேற்றனர்.
ஜியோ ஹாட்ஸ்டாரின் சிஇஓ கெவின் வாஸ், மார்கெட்டிங் அதிகாரி சுஷாந்த் ஸ்ரீராம், கிருஷ்ணன் குட்டி உள்ளிட்டோர் தலைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டின் படைப்பு, தயாரிப்பு சூழலமைப்பை விரிவுப்படுத்தி, தென்னிந்திய படைப்பாளிகளை உலக அரங்குக்குக் கொண்டு செல்லும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
இது சர்வதேச முதலீட்டு வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பிரபல தொடர்களின் புதிய சீசன்கள், ஒரிஜினல் கதைகள், பெரும் நட்சத்திரங்கள் கொண்ட தயாரிப்புகள், ரியாலிட்டி ஷோக்கள் ஆகியவற்றின் 25 டைட்டில்கள் வெளியிடப்பட்டன.