குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை இருப்பதால் இரவு நேரங்களில் பலர் போதையில் அத்துமீறி வீடுகளுக்குள் நுழைவதாகவும், இதனால் அச்சத்துடனே வசிப்பதாகவும் புஷ்பா நகர் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் சுமார் 4 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். குடியிருப்பு, கோயில், பள்ளிகள் உள்ள இடத்தில் மதுபானக் கடை அமைக்கக் கூடாது என்று அரசு விதிமுறை உள்ளது. ஆனால், புஷ்பா நகரின் எதிரில் குளக்கரை சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் கருமாரியம்மன் கோயில் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளன.
இதுகுறித்துப் புஷ்பா நகரைச் சேர்ந்த சூர்யா கூறுகையில், ‘‘சாலையிலேயே குடித்துவிட்டு சண்டை போடுகின்றனர். இதனால், வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. அருகில் இருக்கும் கடைகளுக்குக் கூட போக முடிவதில்லை. பெண்கள் மீது வேண்டுமென்றே விழுகிறார்கள்’’ என்றார்.
கோடீஸ்வரி என்பவர் கூறுகையில், ‘‘தினமும் எங்கள் வீட்டு அருகில் அமர்ந்து மது அருந்துகிறார்கள். பலமுறை அவர்களுடன் சண்டை போட்டும் எந்தப் பயனும் இல்லை. இரவு நேரத்தில் சிலர் அத்துமீறி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றனர். வீட்டு வாசலில் வாந்தி எடுப்பது, சிறுநீர் கழிப்பது போன்ற அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுகின்றனர்’’ என்றார்.
18 வயதுக்கு கீழ் உள்ளவர் களுக்கு மது வழங்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்தக் கடையில் வயது வித்தியாசம் இல்லாமல் மாணவர்களுக்கும் மது விற்கப்படுகிறது. சில மாணவர்கள், சீருடையிலேயே வந்து மது வாங்கிச் செல்வதாக அருண்குமார் என்பவர் தெரிவித்தார்.
இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகி மணி கூறுகையில், ‘‘மக்களுக்கு இடையூறாக இருக்கும் குளக்கரை டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் எனு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வரும் கடையை லீஸ் முடிந்தவுடன் அகற்றுவதாகத் தெரிவித்தனர். ஆனால், தற்போது லீஸை நீட்டித்து கடையை தொடர்ந்து நடத்துகின்றனர்’’ என்றார்.
டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மக்களுக்கு இடையூறாக இருக்கும் குளக்கரை டாஸ்மாக் கடை குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்’’ என்றார். இந்நிலையில் பெண்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறாக இருக்கும் இந்த டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என புஷ்பா நகர் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.