மற்றவை

தந்தனத்தோம் என்று சொல்லியே.. வில்லுப்பாட்டில் விழிப்புணர்வு

க.சக்திவேல்

தெ

ன் மாவட்டங்களில் வில்லுப்பாட்டு இன்றளவும் பிரபலம். நாடகத் தன்மையுடன் கதை கூறிச் செல்வது வில்லுப்பாட்டின் சிறப்பம்சம். காலப்போக்கில் செல்போனும், டிவியும் பொழுதுபோக்கின் இடத்தை ஆக்கிரமித்துவிட வில்லுப்பாட்டு நம்மை விட்டு விலகிச் சென்றுவிட்டன.

நகரங்களில் காண முடியாத இந்தக் கலையை சமூக விழிப்புணர்வுக்காக பயன்படுத்துவதுடன் பாரம்பரிய கலைக்கும் உயிரூட்டி வருகின்றனர் சென்னை பெரம்பூர் எலிசபெத் மகளிர் கல்லூரியின் 'சிட்டிசன் கன்சியூமர் கிளப்' மாணவிகள்.

'தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட.., ஆமா.., வில்லினில் பாட.., வந்தருள்வாய் கலைமகளே' என்று ராகத்துடன் பாடத் தொடங்கும் இவர்கள், இடை இடையே நக்கல் கலந்த நகைச்சுவையுடன் கூறும் விழிப்புணர்வு கருத்துகள் பள்ளி, கல்லூரிகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

“உணவுப் பொருள் கலப்படம், சாலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து வீதிநாடகங்கள் மூல மாக நிகழ்த்தி வந்தோம். ஆனால், வில்லை கையில் எடுத்த பின்புதான் விழிப்புணர்வு கருத்துகளின் வீச்சு மக்களை சென்றடைந்திருக்கிறது. வெறுமனே கருத்துகளை கூறி னால் யாரும் கண்டுகொள்ளவதில்லை. நகைச்சுவையுடன் எடுத்துக் கூறினால்தான் மக்கள் கவனிக்கின்றனர். நாடகம், நகைச்சுவை ஆகியவற்றை ஒருங்கே இணைத்து வில்லுப்பாட்டில் வெளிப்படுத்த முடியும் என்பதால் அதைத் தேர்ந்தெடுத்தோம்' என்கிறார் வில்லுப்பாட்டு குழுவில் இடம்பெற்றுள்ள மாணவி திவ்யா.

ஹார்மோனியம், டிரம்ஸ் வாசிப்பு, பாடல், ஒத்திசை, நாடகம், கதை சொல்லல் என பல திறமைகளை கொண்ட 12 மாணவிகளை தேர்ந்தெடுத்து வில்லுப்பாட்டு குழுவை உருவாக்கி உள்ளனர். இந்த குழுவுக்கு நாடக கலைஞர் நிரஞ்சன் முகபாவனைகள், ராகம், கதை ஆகியவை பற்றி பயிற்சியளிக்கிறார்.

இந்த வில்லுப்பாட்டு குழு உருவாக கல்லூரியின் முதல்வர் ஹனிஃபாகோஷ், தாளாளர் பழமலை, பேராசிரியை ஐ.வள்ளி ஆகியோ ரின் பங்கும் முக்கியமானது.

பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், தன்னார்வ அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகள் என கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இக்குழுவினர் நிகழ்த்தியுள்ளனர். சினிமா பாடல்களின் ராகங்களை எடுத்துக்கொண்டு, பாடல் வரிகளை மாற்றி இவர்கள் பாடுவது எளிதில் மக்களின் கவனத்தை பெறுகிறது. அதில், தினசரிச் செய்திகள், புள்ளி விவரங்களை இடையே இடையே கூறி அசத்துகின்றனர். அன்றாட அனுபவங்களை தொடர்புபடுத்தி பாடுவதால் வில்லுப்பாட்டுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

இந்த குழுவினரின் செயல்பாடுகளை பாராட்டி தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சிறந்த சிட்டிசன் கன்சியூமர் கிளப்புக் கான பரிசை கடந்த ஆண்டு வழங்கியுள்ளது. தொடர்ந்து 6 ஆண்டுகளாக இந்த பரிசை அவர்கள் தக்கவைத்துள்ளனர்.

“நாங்கள் ஒவ்வொரு முறையும் நுகர் வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை முடித்த பிறகும் மக்கள் எங்களிடம் ஆர்வத்தோடு சந்தேகங்களை கேட்கின்றனர். வரும் நாட்களில் மக்கள் கூடும் இடங்களில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்" என்றார் வில்லுப்பாட்டு குழுவின் ஒருங்கிணப்பாளரான மாணவி டி.ஹரிணி.

SCROLL FOR NEXT