இப்படிக்கு இவர்கள்

அவஸ்தைகளின் சுவாரசியத் தொகுப்பு

செய்திப்பிரிவு

‘அண்ணனூர் ஹே, ஆவடி ஹே, அரக்கோணம் ஹேஹே’ கட்டுரை படிக்க சுவாரசியமாகவும், பொதுவெளியில் நாம் படும் அவஸ்தைகளின் தொகுப்பாகவும் இருந்தது.

ரயில்நிலையம், பேருந்துநிலையங்களில் கழிப்பறைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கட்டுரையாளர் அழகாக விளக்கியிருந்தார். பேருந்தில் பயணம் செய்பவர்கள் யாராக இருந்தாலும், பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் கொடூரமான அனுபவத்துக்கு ஒரு முறையேனும் ஆளாகியிருப்பார்கள்.

அந்த மறக்க முடியாத அனுபவத்தை அவர்கள் எக்காலமும் மறக்க மாட்டார்கள். அசுத்தத்தின் உச்சம் அவைதான். இந்த லட்சணத்தில் அவற்றுக்கு ‘நவீனக் கட்டணக் கழிப்பறைகள்’ என்ற பெயர் வேறு.

இவை பெரும்பாலும் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. சிறுநீர் கழிக்கக்கூட இங்கு ஐந்து ரூபாய் கட்டணம் தர வேண்டும். ஆனால், தண்ணீர் இருக்காது. இந்தக் கழிப்பறைகளைப் பராமரிப்போரின் அலட்சியம் ஒருபுறமெனில், அதைப் பயன்படுத்தும் பொதுமக்களின் அலட்சிய மனோபாவம் இன்னொருபுறம்.

பொதுஇடங்கள் நமக்குச் சொந்தமானவையல்ல என்ற மனோபாவம் மாறாத வரையில், இங்கு எதுவும் மாறாது.

- கே.எஸ். முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.

SCROLL FOR NEXT