‘உழைக்கும் மக்களே, ஒன்றுபடுங்கள்’ கட்டுரையில், ஆளும் பாஜக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைத் தெளிவாகப் பல்வேறு புள்ளிவிவரங்கள் மூலம் எடுத்துரைத்துள்ளார் கட்டுரையாளர். தொழிலாளர் நலச் சட்டங்கள் பலவற்றை பெருநிறுவன அதிபர்கள் தீர்மானிக்கும் வகையில், மத்திய அரசு செயல்பட்டுவருவது கண்டிக்கத் தக்கது. சிறு மற்றும் குறு நிறுவனங்களில் தொழிலாளர் நலச் சட்டங்கள் என்பது ஏட்டளவிலேயே உள்ள நிலையில், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகத் தொழிலாளர் விரோதச் சட்டங்கள் பலவற்றை இயற்றுவதற்கு அரசு துணைபோவது அபாயகரமானது. ஒப்பந்தத் தொழிலாளர்களை எல்லாத் துறைகளிலும் சேர்ப்பது, பல வருடங்கள் பணியாற்றியும் பணி நிரந்தரம் செய்யாமல் இழுத்தடிப்பது போன்ற போக்குகள் தற்போது நாடெங்கும் தென்படுகிறது. புதிதாகத் தொழில் தொடங்குவோரைப் பெரிய அளவில் ஊக்குவிக்கும் பாஜக அரசின் செயல், தொழிலாளர்களுக்குப் பணி நிரந்தரம் என்பதைக் கானல் நீராக்கிவிடும். மத்திய அரசு தொழிலாளர் விரோதப் போக்கைக் கைவிட்டு, அவர்களது வாழ்க்கையுடன் விளையாடுவதை நிறுத்துவதே நாட்டு நலனுக்கு வலிமை சேர்க்கும்.
- ஜா. அனந்த பத்மநாபன்,திருச்சி.