ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விஜயதசமி உரையை தூர்தர்ஷன் நேரலையாக ஒளிபரப்பியது வியப்பாக உள்ளது.
மதச் சார்பின்மையைத் தாரக மந்திரமாகக் கொண்டு விளங்கும் இந்த நாட்டில், ஒரு குறிப்பிட்ட மதத்தைத் தூக்கிப் பிடிக்கும் செயல் நிச்சயமாக நல்லதல்ல. இதற்கு முன் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் தசரா சொற்பொழிவுகள் அரசு தொலைக்காட்சியில் ஒரு செய்தியாக மட்டுமே இடம் பெற்றுள்ளது. தற்போதுதான் முதன்முதலாக நேரலை வடிவத்தில் இந்நிகழ்ச்சி பிரபலப் படுத்தப்பட்டுள்ளது.
பகவத்தும் தன்னால் முடிந்த வரை ‘ஹிந்துத்வ'க் கோட்பாடுகுறித்து நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார். தென்னிந்தியாவில் ‘ஜிஹாதிகள்' சுதந்திரமாக நடமாடுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆளும் மத்திய அரசின் மேல் தங்கள் ஆளுமை முழுமையாக உள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவிக்கும் விதமாகவே அவரது பேச்சு இருந்தது. இதைப் போலவே மற்ற மதத் தலைவர்கள் பிரசங்கம் செய்வதற்கும் தூர்தர்ஷன் அனுமதிக்குமா?
- ஜா. அனந்த பத்மநாபன்,திருச்சி.