இப்படிக்கு இவர்கள்

இசைப் பரவசம்

செய்திப்பிரிவு

‘இசைத்தட்டாகச் சுழலட்டும் இனிய வாழ்க்கை’ படித்தேன். ஒரு பாட்டை, கதைச் சூழலும் அதன் வரிகளும் செழுமைப்படுத்துவதைக் காட்டிலும் பாடகரின் குரலும் இசையின் ஊடுருவலுமே உயிர்ப்புள்ளதாக்குகிறது. கட்டுரை இன்னும் சில பாடல்களை எங்களுக்கு ஞாபகமூட்டியது.

‘நிலவு தூங்கும் நேரம்…’ (குங்குமச்சிமிழ்) பாட்டின் துவக்கத்தில் இடம்பெறும் மவுத் ஆர்கனின் தனித்த ஆவர்த்தனத்தில் சொக்கிப்போகாத மனம்தான் உண்டோ? ‘ஓம் சிவ ஓம்’ (நான் கடவுள்) பாடலின் துவக்கமாய் வரும் உடுக்கை இசையின் அதிர்வுகளில் நரம்பு சிலிர்க்காதவர்கள் உண்டோ? ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ (தளபதி) பாட்டில் பல்லவிக்கு முன் மூன்று வினாடிகள் வரும் புல்லாங்குழலிசையைக் கவனிப்பவர்கள் ஏகாந்தத்தை உணர்ந்தவர்களாகவே இருக்க முடியும். ‘கமலம் பாதக் கமலம்’ (மோகமுள்) பாட்டில் யேசுதாஸின் துவக்க ஆலாபனைக்குப் பின்னே கசிந்தபடியிருக்கும் வீணையின் மெல்லிசையில் பரவசமடைந்தவர்கள் பக்தர்கள் மட்டும் இல்லையே?

- முருகவேலன், கோபிசெட்டிபாளையம்.

SCROLL FOR NEXT