கன்னட எழுத்தாளர் யு. ஆர். அனந்தமூர்த்தியின் மறைவு, இந்திய இலக்கிய வரலாற்றின் துடிப்பு மிக்க இயக்க அத்தியாயம் ஒன்றின் முடிவைக் குறிக்கிறது. தனக்குச் சரி என்று படும் விஷயத்துக்காகக் குரல்கொடுக்கும் துணிச்சலும் நேர்மையும் கொண்டிருந்தவர் அவர்.
மக்களுக்குக் கொடுத்த வாக்குகளை நிறைவேற்றுவதாகத் தெரியவில்லையே, ஏன் என்று ஒரு மாநில முதல்வரை நேர்காணலில் மடக்கிக் கேட்ட குரல் அவருடையது. பிராமண சனாதனக் குடும்பத்தில் பிறந்த அவர், பிராமணியத்தின் சாதி பேதங்களுக்கு எதிராகச் சிந்திக்கவும் எழுதவும் பேசவும் செய்பவராகத் திகழ்ந்தார் என்பது முக்கியமானது. மத்தியில் பாஜக ஆட்சி அமையக் கூடாது என்று பகிரங்கமாகப் பேசிய அவர், அப்படி அவர்கள் ஆட்சிக்கு வந்தால், தாம் தேசத்தை விட்டுப் போவதாக அறிவித்திருந்தார்.
அதற்காக அவருக்குப் பயணச் சீட்டு தரத் தயார் என்று சில அமைப்புகள் பின்னர் வம்புக்கிழுத்தன. அவரது மறைவை அடுத்து சிறுமதியாளர்கள் சிலர், அவரது தெருவில் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய அருவருப்பும் அராஜகமான விஷயமும் செய்தித்தாள்களில் வந்திருந்தது. அவர்களை அவர் மன்னிக்கவே செய்திருப்பார். ஏனெனில், தனது கருத்து முரண்பாடுகள், எதிர்ப்பை மீறி அவர் தோழமை பாராட்டி மறைந்தவர்.
- எஸ். வி. வேணுகோபாலன், சென்னை.