சிறப்புக் கட்டுரைகள்

கல்விப் பணி வாய்ப்பில் சமத்துவத்துக்கான வழிகள் | சொல்... பொருள்... தெளிவு

அனைத்துத் தரப்பினருக்குமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டால் பிரச்சினை குறையும்

ம.சுசித்ரா

சாதியப் பாகுபாடுகளைக் களையும் நோக்கில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதிதாக வகுத்த சமத்துவ விதிகளுக்கு எதிர்ப்பலை எழுந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக அதை நிறுத்திவைத்திருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் இந்திய உயர் கல்வித் துறையில் நிலவும் சமத்துவ இடைவெளியின் உண்மை நிலையைப் பகுப்பாய்வு செய்வது அவசியம்.

முன்னேறும் மாணவர்கள்

முதலாவதாக, இந்திய உயர் கல்விச் சூழலில் மாணவர் சேர்க்கையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. சற்றேறக்குறைய இடஒதுக்கீட்டுக்கு நெருக்கமான எண்ணிக்கையில் பெரும்பாலான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது.

இளநிலை, முதுநிலை, எம்.ஃபில், முனைவர் பட்ட ஆராய்ச்சி (பிஎச்.டி.) ஆகிய அத்தனை நிலைகளிலும் அனைத்துச் சமூகப் பிரிவினருக்கும் உரிய இடம் கிட்டத்தட்ட வழங்கப்பட்டு வருகிறது.

நம்பிக்கைக்குப் பாத்திரமாக, முதுநிலை, எம்.ஃபில். பிஎச்.டி. ஆகிய உயர்நிலைப் பட்டப்படிப்புகளில் பழங்குடியினரின் சேர்க்கை இடஒதுக்கீட்டு அளவைக் காட்டிலும் 1.5இல் இருந்து 2.7 மடங்கு கூடுதலாக உள்ளது.

அதேபோன்று இளநிலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு மேல்நிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையும் அனைத்துச் சமூகப் பிரிவினர் மத்தியிலும் கணிசமாக அதிகரித்துள்ளது.

கல்விக்கு அடுத்தபடியாகப் பணிச் சந்தையில் அடியெடுத்து வைக்கும்போது சமூகரீதியான ஏற்றத்தாழ்வு நிலவுவதைக் காண முடிகிறது. நாட்டின் 56 மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் இடஒதுக்கீட்டு விகிதாச்சாரப்படி பெரும்பாலான இடங்கள் நிரப்பப்படவில்லை என்பதை யுஜிசி 2023 ஆண்டறிக்கை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

சமூகநீதி இடைவெளி

இந்திய அரசமைப்பு, பட்டியல் சாதியினருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5%, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% என்பதாக இடஒதுக்கீட்டை உறுதிசெய்திருக்கிறது. பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுள்ள பணி நியமனமோ இதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. உயர் கல்வி சார்ந்த ஆசிரியர் பதவிகளில் தொடக்கநிலை உதவிப் பேராசிரியர் பணி.

இந்தியா முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்களாகப் பணிபுரிவோரின் விகிதாச்சாரத்தைக் கணக்கிட்டால், 12.5% பட்டியல் சாதியினர் மட்டுமே பணிபுரிகின்றனர். அதிலும், 6.1% பழங்குடியினர் மட்டுமே உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவையன்றி, பொதுவாகச் சமூகத்தில் அதிகாரம் படைத்தவர்களாகக் கருதப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் 19.3% மட்டுமே உதவிப் பேராசிரியர்களாகப் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். உதவிப் பேராசிரியர் நியமனத்திலேயே இவ்வளவு இடைவெளி இருக்கும்போது, அடுத்தடுத்த உயர் பதவிகளுக்கான நியமனத்தில் மேலதிக இடைவெளி காணப்படுகிறது.

அதாவது 27 ஓபிசி பேராசிரியர்கள் இருக்க வேண்டிய பல்கலைக்கழகங்களில் சராசரியாக 7.2 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். 15 எஸ்.சி. பேராசிரியர்கள் பணியாற்ற வேண்டிய துறைகளில் 8.8 பேர் மட்டுமே பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

7.5 எஸ்.டி பேராசிரியர் கற்பிக்க வேண்டிய பல்கலைக்கழகங்களில் 2.2 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டிருக்கிறது. இடஒதுக்கீட்டுக்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள பாரதூரத்தை இது பட்டவர்த்தனம் ஆக்குகிறது.

ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் இதேபோன்றுதான் நிரப்பப்பட்டுள்ளன. குரூப் சி எனப்படும் கடைநிலைப் பணியில் இடஒதுக்கீட்டுக்குச் சற்றே நெருங்கிய எண்ணிக்கையில் ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். குரூப் பி, குரூப் ஏ ஆகிய உயர்நிலை அதிகாரம் சார்ந்த பணியிடங்களில் இடஒதுக்கீட்டைக் காட்டிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பணி நியமனம் நடைபெற்றுள்ளது.

சீர்திருத்தம் தேவை

இதிலிருந்து கல்வியைக் காட்டிலும் உயர் கல்வி சார்ந்த வேலைவாய்ப்பில் சமத்துவமின்மை நிலவுவது உறுதியாகிறது. உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் உள்ள இடைவெளியை இட்டுநிரப்ப நினைத்தால் ஒரு கல்வி ஆண்டுக்குள் அதனை வெற்றிகரமாகச் செய்து முடிக்கலாம்.

அதேவேளையில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பைச் சீர்செய்வது அவ்வளவு எளிதான வேலையல்ல. இடஒதுக்கீட்டு விதிமுறைகளை மீறி நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பணி ஓய்வு பெறுவதைப் பொறுத்தே அடுத்தகட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

அடுத்து, இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடு தொடர்பான தரவுகளை ஆராய வேண்டியுள்ளது. கடந்த 2023-24 கல்வியாண்டில் 704 பல்கலைக்கழகங்கள், 1,533 கல்லூரிகளின் சம வாய்ப்பு மையங்கள் (Equal Opportunity Centres), எஸ்.சி./எஸ்.டி. மையங்களில் மாணவர்கள் அளித்த புகார்களை உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி அண்மையில் சமர்ப்பித்தது.

இதில் இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் படித்துவரும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் தொடர்பான 378 புகார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. முக்கியமாக, 90% புகார்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

தீர்வை நோக்கி

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ள, யுஜிசியின் ‘உயர் கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல் 2026’இல் உள்ள போதாமைகள் களையப்பட வேண்டும். யுஜிசியின் 2026 வழிகாட்டுதல், சமூகரீதியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் எதிர்கொள்ளும் சாதியப் பாகுபாட்டைத் தடுக்க முயல்கிறது.

அது மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்கள், பிற ஊழியர்களுக்கும் சமத்துவம் உறுதி செய்யப்படும் என்கிறது. இவற்றுக்குச் செயல்வடிவம் கொடுக்க அனைத்துச் சமூக மாணவர்களை உள்ளடக்கிய சூழல், சாதியக் கொடுமைகளுக்கு எதிராகப் புகார் அளிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டால் மட்டும் போதாது.

பணிவாய்ப்பில் சமத்துவத்தை நிலைநாட்டுவதே தீர்வை நோக்கிய சரியான நகர்வாக இருக்கும். குறிப்பாக, உயர் பதவிகளில் அனைத்து சமூகப் பிரிவினரும் உரிய பிரதிநிதித்துவத்துடன் இடம்பெறுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட வேண்டும். அனைத்துத் தரப்பினருக்குமான பிரதிநிதித்துவம் வழங்கப்படும் பட்சத்தில் பிரச்சினையின் தீவிரத்தன்மை வெகுவாகக் குறையும்.

சமய - சமூக நல்லிணக்கத்தை வளர்த்தெடுக்கக்கூடிய நேர்மறையான நிகழ்ச்சிகள் உயர் கல்வி வளாகங்களில் வட்டார அளவில் திட்டமிடப்பட வேண்டும். அனைத்துச் சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் அவற்றில் பங்கேற்பதன் மூலம், சுமுகமான வழிகளில் சமத்துவம் கனியும் உன்னத நிலை எட்டப்பட வேண்டும்.

SCROLL FOR NEXT