டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சிறப்பை இந்தியாவின் சுனில் கவாஸ்கர் படைத்தது பெரும் சாதனை. கிரிக்கெட் என்றாலே டெஸ்ட் போட்டிகள் என்றொரு காலம் இருந்தது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடப்பது முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது. கிரிக்கெட்டில் எத்தனையோ ஜாம்பவான்கள் விளையாடிய காலத்தில்கூட டெஸ்ட் போட்டிகளில் பத்தாயிரம் ரன் என்கிற மைல்கல்லை யாரும் எட்டியிருக்கவில்லை.
இச்சாதனைனையை முதன்முதலில் கவாஸ்கர் தான் நிகழ்த்திக்காட்டினார். வேகப்பந்து வீச்சு கோலோச்சிய காலத்தில், 1971ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானவர் சுனில் கவாஸ்கர்.
உலகில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சுகளை எதிர்கொண்ட வீரர்களில் இவரும் ஒருவர். டெஸ்ட் போட்டிகளில் கவாஸ்கர் விளாசிய 34 சதங்களில் 15 சதங்கள் வேகப்பந்து வீச்சில் கொடிக்கட்டிப் பறந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக எடுத்தவைதான்.
எண்பதுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களைக் குவிக்க வாய்ப்புள்ள ஒரே வீரராக கவாஸ்கர் மட்டுமே இருந்தார். அந்தச் சாதனையை 1987ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராகப் படைத்தார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 63 (124ஆவது டெஸ்ட் போட்டி) ரன்களைக் கடந்தபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்கிற சாதனையை கவாஸ்கர் படைத்தார். அந்த மைல்கல்லை எட்டிய பிறகு 125 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளோடு டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வுபெற்றார் கவாஸ்கர்.
- மிது