தமிழில் அபுனைவுகள் முன்னெப்போதைவிடவும் இப்போது கூடுதலாக நூலாக்கம் பெற்றுவருகின்றன. தொடர்ந்து மொழியாக்கப் பணிகளோடு அபுனைவுகள் பற்றியும் தொடர்ந்து எழுதிவருகிற ப.கு.ராஜனிடம் தமிழின் குறிப்பிடத்தக்க அபுனைவுகள் குறித்துக் கேட்டோம்:
தமிழ் மக்களின் வரலாறு, உலக நோக்கு, அரசியல், இலக்கியம் ஆகியவை குறித்து வந்துள்ள நூல்கள் ஏராளம். கமில் சுவலபில், ஜார்ஜ் ஹார்ட் மற்றும் சமீபத்தில் மறைந்த நொபுரு கரோஷிமா ஆகியோர் எழுதியுள்ள நூல்கள் தனித்துவம் வாய்ந்தவை. மிகுந்த பொருட்செறிவுடன் விருப்பு வெறுப்பின்றி எழுதப்பட்டவை.
அதுதவிர, பேராசிரியர் ஆர்.செண்பகலக்ஷ்மி போன்றோர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூல்களும் முக்கியமானவை. இவையெல்லாம் அதிகமாய்த் தமிழில் மட்டுமே வாசிக்கக் கூடியவர்களுக்கு இன்னும் வந்து சேராத நூல்களாகவே உள்ளன. இவை தவிர்த்து, நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட நூல்களும் ஏராளமாகவே உள்ளன. அவற்றுள் சுயமான சிந்தனை, ஆழம், விரிவு, வாசிப்புத் தளத்தில் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பார்த்தாலும், எந்தவொரு பட்டியலிலும் விடுபடக் கூடாத நூல்கள் பல உள்ளன. இருந்தாலும், சமகாலத் தமிழ் வாழ்வு, வரலாறு, இலக்கியம், சமூகம் ஆகியவை குறித்துக் கட்டாயமாக பத்து நூல்கள் மட்டுமே பட்டியலிட வேண்டுமென்றால் பின்வருவனவற்றைக் கூறலாம்.
1. அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுப்பு- I, II, III
தொகுப்பாசிரியர்: ஞான.அலாய்சியஸ்
வெளியீடு: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம். தொடர்புக்கு: 0462 - 2561394
அசலான சுயசிந்தனையாளரும் செயல்பாட்டாளரும் மறைந்து 100 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னமும் சமூகப் பொருத்தப்பாடு உடையவருமான அயோத்திதாசரின் எழுத்துக்கள்.
2. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை காரல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ்.
தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை, வெளியீடு: என்.சி.பி.ஹெச் நிறுவனம், தொடர்புக்கு: 044-26251968
உலகப் பொருளாதாரம் மீண்டும் மீண்டும் சிக்கலில் விழுந்து திணறிக்கொண்டிருக்கும் சமகாலச் சூழலில், உலகம் எங்கும் மீண்டும் கவனம் பெற்றுள்ள ஒரு சில நூல்களில் முக்கியமானது. எஸ்.வி.ராஜதுரையின் காலப்பொருத்தம் கொண்ட விளக்கங்களுடன் வெளிவந்துள்ளது.
3. பெரியார்: சுயமரியாதை சமதர்மம்
எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா
வெளியீடு: விடியல் பதிப்பகம், தொடர்புக்கு: 9789457941
தமிழகத்தின் அரசியல், சமூக மாற்றங்களின் ஒரு நூற்றாண்டு வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாத நூல்.
4. தமிழர்களின் தத்துவ மரபு தொகுப்பு I , II
அருணன்
வெளியீடு: வசந்தம் பதிப்பகம், தொடர்புக்கு: 0452 - 2621997
தத்துவம் என்றாலே அது மதம் சம்பந்தப்பட்டது. எங்கிருந்தோ வந்தது என்பதை புறமொதுக்கி, தமிழ்ச் சமூகம் தன் முயற்சியாகவும், வெளியிலிருந்து ஏற்றுக்கொண்டும் உருவாக்கிக்கொண்ட தத்துவ நோக்குகளின் வரலாறு.
5. பாட்டும், தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும்
ராஜ்கெளதமன்
வெளியீடு: தமிழினி பதிப்பகம். தொடர்புக்கு: 9344290920
தமிழ்ச் சமூகத்தின் உருவாக்கம் குறித்து ஒரு சுயமான சிந்தனையாளரின் பல நூல்களில் முக்கியமானதொரு படைப்பு.
6. ம.சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம் தொகுதி I, II, II
தொகுப்பாசிரியர்கள்: பா.வீரமணி, முத்து.குணசேகரன்
வெளியீடு: தென்னிந்திய ஆய்வு மையம். தொடர்புக்கு: 044 - 28482441
தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட், மண்ணிற்கேற்ற மார்க்ஸியத்துக்கான தேடலைத் தொடங்கிவைத்த மேதையின் எழுத்துக்கள்.
7. ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்
தொகுப்பு: பசு.கவுதமன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம், தொடர்புக்கு: 044 - 24332424
தந்தை பெரியாரின் வாழ்க்கையின் பரந்துபட்ட அக்கறைகளை அறியத்தரும் அவரது எழுத்துக்களின் தொகுப்பு நூலிது.
8. பண்பாட்டு அசைவுகள்
தொ.பரமசிவம்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம். தொடர்புக்கு: 9677778861
நாம் நன்கறிந்த தமிழகத்தின் அறியப்படாத பண்பாட்டு, வரலாற்றுக் கூறுகளை விளக்கும் நூல்.
9. புதிய தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி- I, II, III
பதிப்பாசிரியர்கள்: சிற்பி பாலசுப்பிரமணியன்
நீல.பத்மநாபன்
வெளியீடு: சாகித்திய அகாடமி, தொடர்புக்கு: 044 - 24354815
சங்க இலக்கியங்கள் முதல் சமகால இலக்கியங்கள் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு. தகுதிமிக்க பதிப்பாசிரியர்கள் தொகுத்துள்ளனர்.
10. தமிழர் வளர்த்த தத்துவங்கள்
தேவ.பேரின்பன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம், தொடர்புக்கு: 044 - 24332424
தமிழ்ச் சமூகம் தனது மண் சார்ந்த வாழ்க்கையிலிருந்து உருவாக்கி வளர்த்த தத்துவங்கள் குறித்த நூல்.