தமிழகத்தில் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் ஒரு தலித்தை முதல்வராக்கி இருப்பார்கள்...” என தொல். திருமாவளவன் கூறியுள்ளது ( ‘தி இந்து’ பிப் 2, 2016) மிகவும் சரியானது.
காங்கிரஸுக்கு எப்போதும் தலித்துகளை உள்ளடக்கும் ஒரு வரலாறு உண்டு. ஒருவேளை அது காந்தியில் தொடங்கியிருக்கலாம். பெரிய அளவில் ஆலயப் பிரவேசத்திலும் தீண்டாமை ஒழிப்பிலும் பிற மேல் சாதியினரை அந்தக் கட்சி அளவுக்கு இறக்கியது யாருமில்லை.
90-களில் தென் மாவட்டக் கலவரங்கள் நடைபெற்றபோது தலித்துகளுக்கு ஆதரவாக கருப்பையா மூப்பனார் மாநாடு ஒன்றைக் கூட்டியது நினைவுக்கு வருகிறது. நிச்சயமாக கருணாநிதிக்கோ, இல்லை ஜெயலலிதாவுக்கோ, இல்லை தமிழ்த் தேசியர்களுக்கோ அப்படி ஒரு கலவர காலகட்டத்தில் தங்களைத் தலித்துகளோடு அடையாளப்படுத்திக்கொள்ளும் தைரியம் கிடையவே கிடையாது.
திருமாவளவனை முன்னிறுத்தி, அரசியல் அரங்கில் அவருக்கு உரிய பங்கை அளித்தது என்பதுகூட முதலில் கருப்பையா மூப்பனார்தான்.
ஒவ்வொரு கட்சியும் தலித் பிரிவு என ஒன்றை வைத்துக்கொண்டுதான் உள்ளன. ஆனால், அது போல ஒரு ஏமாற்றும் பச்சை அயோக்கியத்தனமும் எதுவும் இல்லை. அவர்களைச் சுதந்திரமாக தலித்துகளுக்கான போராட்டங்களை எடுக்க எந்தக் கட்சிகளும் அனுமதித்தது இல்லை. ஒரே விதிவிலக்கு மார்க்சிஸ்ட் கட்சி. அவர்களது ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ முக்கியமான பல போராட்டங்களை தலித்துகளுக்காக நடத்தியுள்ளது. உத்தபுரம் ஊரறிந்த உண்மை. தருமபுரியிலும் அவர்களின் பங்கு இருந்தது. உசிலம்பட்டி கவுரவக் கொலை பிரச்சினையை வெளியில் கொண்டுவந்ததில் அவர்களின் பங்கு முக்கியம். அப்பகுதி ஆதிக்க சாதியினர் அர்ஜுன் சம்பத்தை வைத்து மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராகப் பெரிய அளவில் ஒரு பொதுக்கூட்டமே நடத்தினர்.
கடைசியாக ஒன்று, நான்கு கட்சிக் கூட்டணியில் தலித் ஒருவரை முதல்வர் ஆக்க வேண்டும் என்பதை முகநூலிலும் வெளியிலும் பலரும் பேசியுள்ளனர். அதுவும்கூட இங்கு மட்டுமே அது சாத்தியம் என்பதால்தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும். வேறு எந்தக் கட்சியிலும் அது சாத்தியமில்லை என்பதால்தான் அதை இங்கே வைக்கின்றனர். ஆனால், அப்படி அங்கு வைக்க இயலாதது குறித்து அவர்கள் காக்கும் மவுனம் நேர்மையற்றது. யாராவது திமுகவிடமோ அதிமுகவிடமோ இந்தக் கோரிக்கையை வைக்கிறார்களா பாருங்கள். மறறபடி தலித் போராட்டங்களை உண்மையான தீவிரத்துடன் யாரேனும் எடுத்துள்ளார்கள் என்றால், அவர்கள் மா-லெ குழுவினர்தான். திருநாள்கொண்டசேரியிலும்கூட அவர்கள் பங்கு முக்கியமானது. ஆக, தலித்துகளின் இயற்கைக் கூட்டணி இடதுசாரிகள்தான்.
ஆயிரம் குறைபாடுகளைச் சொல்ல முடியும் என்றாலும்கூட, வேறு எந்தக் கட்சிகளைக் காட்டிலும் இன்றுள்ள நிலையில், இடதுசாரிகளே தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் இயற்கைக் கூட்டணியாக இருக்க முடியும். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ் மிகவும் பலவீன மடைந்துள்ள நிலையில், இடதுசாரிகளுடன்தான் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது!