நந்திதுர்கத்தில் உருவான பாலாற்றின் வளத்தை முழுமையாக பயன்படுத்திய பெருமை கோலார் மாவட்டத்துக்கு மட்டுமே உண்டு. கர்நாடகத்தின் கிழக்கு நுழைவு வாயில் கோலார் மாவட்டம். தங்க வயல் சுரங்கத்தின் செழிப்பு ஒரு பக்கம், மடை திறந்த தண்ணீரால் விவசாயத்தின் வளம் மறுபக்கம். மக்களின் வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாக இவை திகழ்ந்தன.
40 ஆண்டுகளுக்கு முன்பு வரை வளமாக இருந்த மக்கள், தங்கச் சுரங்கம் மூடப்பட்டதால் வேலை இழந்தனர். பருவம் தவறியதால் விவ சாயத்தையும் இழந்தனர். இது இரண்டும் ஒருசேர நடந்ததால் கோலார் மாவட்ட மக்கள் இன்று தண்ணீருக்கே தவிக்கிறார்கள்.
சிக்பெல்லாபூர், கோலார் மாவட்டத்தில் 93 கி.மீ. தொலைவு பயணிக்கும் பாலாற்றின் பெரும் பகுதி மனிதனின் ரத்த நாளங்களைப்போல ஓடை, கால்வாய் மற்றும் ஏரிகளால் பிணைந்துள்ளது. பாலாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து கிடைக் கும் மொத்த தண்ணீரையும் கோலார் மாவட்ட ஏரிகளை நிரப்பும் வகையில் வடிவமைத் துள்ளனர்.
கோலார் மாவட்டத்தில் வழி எங்கும் ஏரிகள் தென்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் அதிக எண்ணிக்கை யிலான ஏரிகளைக் கொண்டது இம்மாவட்டம்தான். 8,223 சதுர கி.மீ. பரப்பு கொண்ட கோலார் மாவட்டத்தில் மட்டும் 4,488 ஏரிகள் இருக்கின்றன. அதேபோல, அதிக எண்ணிக்கையில் ஆழ்துளைக் கிணறுகள் இருப்பதும் இங்குதான்.
பேத்தமங்கலா ஏரி
‘பேத்தமங்கலா ஏரி’ வேலூர் மாவட்ட மக்களின் எதிர்காலம் என்று குறிப்பிடலாம். பாலாற்றின் கழுத்துப் பகுதியில் கட்டப்பட்ட மிகப்பெரிய ஏரி. பாலாற்றின் போக்கில் மிகப்பெரிய தடுப்பை ஏற்படுத்தி கட்டப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இன்றும் ஒரு வழக்கு மொழி இருக்கிறது. ‘பேத்தமங்கலம் ஏரி உடைந்தால் பாலாற்றில் வெள்ளம் வரும்’ என்று. அதற்கு காரணமும் இருக்கிறது.
பேத்தமங்கலா தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை
1903-ம் ஆண்டு பாலாற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் (சிக்பெல்லாபூரில் 1346 மி.மீ., கோலார் மாவட்டத்தில் 1111 மி.மீ. மழை பெய்தது) ஏற்பட்ட பெருவெள்ளம் பலம்மிக்க பேத்தமங்கலா ஏரி கரைகளை உடைத் துக்கொண்டு சீறிப் பாய்ந்தது. வழியில் இருந்த சிறிய ஏரிகளை யும், ஆற்றின் கரைகளை இணைத்த பாலங்களை யும் வெள்ளத்தில் இருக் கும் இடம் தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டன. பேத்தமங்கலா நகருக்கு செல்லும் வழியில், பெருவெள்ளத்தால் சேதமடைந்த பாலாற்று பாலம் 1904-ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. நூற்றாண்டைக் கடந்து கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த பாலத்தில் இடம்பெற்றுள்ள கல்வெட்டு ஒன்று பெருவெள்ளத்தை நினைவூட்டுகிறது.
வரலாறு காணாத பெருவெள்ளத்தை கண்ட அன்றைய மைசூர் சமஸ்தானம், ஏரிக் கரையின் உயரத்தை அதிகரிக்க முடிவு செய்தது. விவசாயத்துக்கு மட்டும் இல்லாமல் பேத்தமங்கலா ஏரியில் இருந்து உறிஞ்சிய தண்ணீர், கோலார் தங்கச் சுரங்க பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை, தங்கச் சுரங்க பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டனர். இதற்காக, பேத்தமங்கலாவின் கரையை 9 அடியில் இருந்து 18 அடியாக உயர்த்தி, தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் தினமும் 72 மில்லியன் கன அடி தண்ணீர் சப்ளை செய்யும் திட்டத்தை தயாரித்தனர்.
இதற்காக, பேத்தமங்கலாவின் முழு கொள் ளளவான 222.56 மில்லியன் கனஅடியில் இருந்து 349.44 மில்லியன் கனஅடியாக கரையை உயர்த்தியுள்ளனர். இதற்காக, 1892-ம் ஆண்டு மைசூர்-சென்னை இடையிலான நதிநீர் ஒப்பந்தபடி கரையை உயர்த்திக் கொள்ள அனுமதி கேட்டு சென்னை மாகாண அரசாங் கத்துக்கு மைசூர் சமஸ்தானம் கடிதம் எழுதியது.
அதில், ‘பாசன வசதிக்கு மட்டுமல்லாமல், மக்களின் குடிநீர் தேவைக்கும், தங்கச்சுரங்க பணிகளுக்காகவும் தண்ணீர் தேவை இருக்கிறது. இதனால் தேவைப்படும் தண்ணீரைத் தேக்கி வைப்பதால் சென்னை மாகாண அரசாங்கத்தின் நீர்பாசனத்தில் பாதிப்பு ஏதும் ஏற்படாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அனுப்பிய அப்போதைய சென்னை மாகாண நீர்பாசன முதன்மை பொறியாளர் கர்னல் ஏ.டபிள்யு.ஸ்மார்ட் ‘கரை உயர்த்திக்கொள்ள எந்தவித ஆட்சேபனையும் இல்லை’ என குறிப்பிட்டுள்ளார். ஆனால், அனு மதித்த அளவைவிட கூடுதல் நீரை தேக்கிய மைசூர் அரசாங்கம் பாசன பரப்பையும் அதிகரித்தது.
பேத்தமங்கலா ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் 34 மதகுகள் வழியாக பாலாற்றின் கரைகளை எட்டியபடி பாய்ந்ததை அப்பகுதி மக்கள் இன்றும் நினைவு கூறுகின்றனர்.
மைசூர் சமஸ்தானத்தின் 1000-மாவது ஏரி
பெருவெள்ளத்தால் இழந்த தண்ணீரை சேமித்து வைக்க ஏரிகளின் கரையை மைசூர் அரசாங்கம் அவசர அவசரமாக உயர்த்திக் கட்டியது. ஆந்திர மாநிலத்துக்கு மிக அருகில் இருக்கும் ராமசாகர் ஏரிக் கரையை உயர்த்தி நீர்த்தேக்க அளவை அதிகரித்தது. 1904-ம் ஆண்டு கணக்குப்படி ராமசாகர் ஏரியின் மொத்த பரப்பளவு 803.89 ஹெக்டர். ஏரியின் இடப்பக்க கரை 705 அடி நீளம், வலதுகரை 500 அடி நீளம். இந்த ஏரியில் 12 அடி உயரத்துக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
ராமசாகர் ஏரிக்கரையில் இடம் பெற்றுள்ள கல்வெட்டில், ‘மேல் பாலாற்றில் 999 ஏரிகள் உள்ளன. கீழ்பகுதியில் எந்த ஏரியும் இல்லை. ராமசாகர் ஏரியால் 1,280 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
நந்திதுர்கத்தில் தொடங்கி ராமசாகர் வரை மொத்தம் 1000 ஏரிகளில் பாலாற்று நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் தண்ணீரை தேக்கி வைக்கும் சிறந்த பாசன கட்டுமான திட்டங்களை மைசூர் சமஸ்தானம் திட்டமிட்டு செய்திருப்பது தெரியவருகிறது. இருப்பினும் அன்று ஆயிரமாவது ஏரியாக கட்டமைக்கப்பட்ட ராமசாகர் ஏரியைச் சுற்றியுள்ள கிராமங்கள் இன்று வானம் பார்த்த பூமியாகத்தான் இருக்கின்றன.
பாலாறு பயணிக்கும்…
|படங்கள்:வி.எம்.மணிநாதன் |